ராமேஸ்வரம் அகல ரயில் பாதை தொடக்கவிழா மதுரைக்கு திடீர் மாற்றம்
சென்னை:மானாமதுரை - ராமேஸ்வரம் அகலப் பாதைத் தொடக்க விழா ராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளது.
மானாமதுரை, ராமேஸ்வரம் இடையே அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையைத் தொடங்கி வைக்கும் விழா வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்த விழா ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சோனியா காந்தி ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்து வைப்பார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
சோனியா காந்தி வருவதையொட்டி ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடங்கின. தீவிரக் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், அன்றைய தினம் ஆடி அமாவாசை தினம் என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரத்திற்கு வருவார்கள். ஆனால் சோனியாகாந்திக்குப் பாதுகாப்பு என்ற பெயரில் போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் கெடுபிடி செய்கின்றனர். எனவே விழா தேதியை மாற்ற வேண்டும் என பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின.
மேலும், பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் நிகழ்ச்சியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.
இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் நடப்பதாக இருந்த விழா தற்போது மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளது.
மதுரை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் ஞாயிறு மாலை 4.30 மணிக்கு விழா நடைபெறும். வீடியோ கான்பரன்சிங் மூலம் புதிய ரயில் பாதையை திறந்து வைக்கிறார். மேலும், புதிய அகலப் பாதையில், ராமேஸ்வரம் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.
விழாவில் முதல்வர் கருணாநிதி, ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், இணை அமைச்சர் வேலு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்த மார்க்கத்தில் 13ம் தேதி முதல் வழக்கமான போக்குவரத்துத் தொடங்குகிறது.