மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தில் 4 பேர்பலி: கேபிள் வயரால் விபரீதம்
சேலம்: சேலத்தில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகிவிட்டனர்.
சேலம் கன்னங்குறிச்சி நாராயணன் தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது வீட்டின் மேல் தனியார் நிறுவனத்தின் கேபிள் டிவி வயர் செல்கிறது.
இந்த கேபிள் அறுந்து கீழே உள்ள மின்சார வயர்கள் மீது விழுந்தது. டிவி கேபிளின் பாரம் தாங்காமல் மின்சார வயரும் சேர்ந்து அறுந்து கந்தசாமியின் வீட்டு வாசலில் வந்து விழுந்தது.
வீட்டு வாசலில் கேபிள் அறுந்து கிடந்ததை பார்த்த கந்தசாமி, அதை ஓரமாக தூக்கி போட முயன்றார். அப்போது அதன் வழியாக பாய்ந்த உயர் அழுத்த மின்சாரம் கந்தசாமியின் உடலில் பாய்ந்து அந்த இடத்திலேயே பரிதாபமாக கருகி இறந்தார்.
கணவரைக் காப்பாற்ற முயன்று அவரை தொட்ட மனைவி அலமேலுவும் பலியானார்.
வாசலில் தாய், தந்தை இருவரும் சுய நினைவற்று கிடந்ததை பார்த்த அவர்களது மகள் ராணியும், பேத்தி தேன்மொழியும் அவர்களைத் தூக்க முயன்றபோது அவர்கள் இருவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்.
தாய், தந்தை, மகள், பேத்தி என வரிசையாக இறந்து கிடந்ததை பார்த்த அந்த பகுதி மக்கள் போலீசுக்கும், மின் வாரியத்துக்கும் தகவல் கொடுத்தனர். அதன் பின்னர் மின் சப்ளை நிறுத்தப்பட்டு 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன.