குற்றவாளியை கொல்ல கோர்ட்டுக்கு வந்த கும்பல்
நெல்லை:நெல்லை நீதிமன்றத்தில் இன்று காலையில் கொலை குற்றவாளியைக் கொல்ல வந்த கும்பலால் நீதிமன்றமே பரபரப்பானது.
நெல்லையில் நடந்த ஒரு கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு ஜாமீனில் வெளியே உள்ள குற்றவாளிகள் இன்று வாய்தாவுக்காக நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டனர்.
அப்போது நீதிமன்ற வளாகத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் திரிந்த 6 பேரை போலீசார் பிடித்தனர்.
அவர்களிடம் சோதனை நடத்தியபோது அரிவாள், கத்தி ஆகிய ஆயுதங்களும் இருந்தன.
அப்போது 6 பேரும் தப்பி ஓட ஆரம்பித்தனர். அவர்களை போலீசார் விரட்டிச் சென்றனர்.
இதனால் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. பொது மக்கள் பயந்து போய் சிதறி ஓடினர்.
இதில் 4 பேர் தப்பிவிட்டனர். போலீசாரிடம் 2 பேர் மட்டும் சிக்கினர்.
பிடிபட்ட 2 பேரிடம் நடந்த விசாரணையில், இன்று கோர்ட்டிற்கு ஆஜராக வரும் குற்றவாளியை கொல்வதற்காக வந்தோம் எனக் கூறியுள்ளனர்.
ஆனால் யாரைக் கொல்ல அவர்கள் வந்தனர் என போலீசார் சொல்ல மறுத்து விட்டனர்.
இந்த சம்பவத்தால் நெல்லை நீதிமன்ற வளாகமே இன்று காலை கடும் பரபரப்புக்குள்ளானது.