கருணாநிதி தொகுதியின் பெயர் மாறியது
சென்னை:முதல்வர் கருணாநிதியின் சேப்பாக்கம் சட்டசபைத் தொகுதியின் பெயர் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி என்று மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மறு சீரமைப்பு செய்யப்பட்ட தொகுதிகளின் இறுதிப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து நடைமுறைகளும் முடிக்கப்பட்டு விட்ட நிலையில், மறு சீரமைக்கப்பட்ட நாடாளுமன்ற, சட்டசபை தொகுதிகளின் இறுதி நிலவரங்கள் பட்டியலாக அறிவிக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.
மறு சீரமைப்பு செய்யப்பட்ட தொகுதிகளின்படி 7 எம்.பி. தொகுதிகளும், 44 சட்டசபைத் தொகுதிகளும் தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், நீலகிரி, சிதம்பர், நாகப்பட்டனம், தென்காசி ஆகிய எம்.பி. தொகுதிகள் தனித் தொகுதிகளாகும்.
முன்பு 42 தொகுதிகளாக இருந்து வந்த தனித் தொகுதிகள் தற்போது 44 ஆக உயர்ந்துள்ளன. இந்தத் தனித் தொகுதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கான தொகுதிகள் 2 ஆக உள்ளன.
சேப்பாக்கம் பெயர் மாறியது
முதல்வர் கருணாநிதியின் தொகுதியான சேப்பாக்கம் தொகுதியின் பெயர் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி என மாற்றப்பட்டுள்ளது.
மறு சீரமைப்புப் பணியின்போது திருவல்லிக்கேணி தொகுதி ஒழிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் சென்னை மாநகரின் பழமையான பகுதிகளில் ஒன்றான திருவல்லிக்கேணியின் பெயர் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் தேர்தல் ஆணையத்திற்குக் கோரிக்கை வந்தது.
இதையடுத்து தற்போது திருவல்லிக்கேணி என்ற பெயர் சேப்பாக்கம் தொகுதியுடன் சேர்க்கப்பட்டு விட்டது. அதன்படி சேப்பாக்கம் தொகுதி இனி சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி என அழைக்கப்படும்.