ஹனீப்பின் சாட்டிங் விவரம் வெளியீடு:ஆஸி. அமைச்சரின் முகத்திரை கிழிப்பு
மெல்போர்ன்:பெங்களூர் டாக்டர் முகம்மது ஹனீப் தனது சகோதரர் சொயீப் ஹனீப்புடன் சாட்டிங் மூலம் பேசியதன் முழு விவரங்களையும் ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள் வெளியிட்டு, அந்நாட்டு குடியுரிமைத் துறை அமைச்சர் கெவின் ஆண்ட்ரூஸின் முகத்திரையை கிழித்துள்ளன.
ஹனீப் விவகாரத்தில் ஆஸ்திரேலிய காவல்துறை மற்றும் அரசை விட அந்நாட்டு குடியுரிமைத் துறை அமைச்சர் கெவின் ஆண்ட்ரூஸ்தான் படு மோசமாக நடந்து கொண்டார். ஆஸ்திரேலிய நீதிமன்றம் ஹனீப்பை விடுதலை செய்தும் கூட விசாவை ரத்து செய்து அவரை முடக்கிப் போட முயன்றதும் ஆண்ட்ரூஸ்தான்.
ஆனால் ஹனீப்புக்கு எதிராக ஒரு சிறு துரும்பும் இல்லாததால், வேறு வழியின்றி அவரை விடுவிக்க முடிவு செய்தது ஆஸ்திரேலிய அரசு. அப்படியும் கூட ஹனீப்பின் விசாவை ரத்து செய்தது செய்துததான் என்று பிடிவாதமாக கூறினார் கெவின்.
இந் நிலையில் ஹனீப் இந்தியா திரும்பியதும், கெவின் ஆண்ட்ரூஸ் அளித்த ஒரு பேட்டியில், ஹனீப் தனது சகோதரருடன் சாட்டிங் மூலம் பேசியதாக ஒன்றைக் கூறி இதனால்தான் அவர் மீது நாங்கள் சந்தேகப்பட்டோம் என்று புது குண்டைத் தூக்கிப் போட்டார்.
ஆனால் போட்டது வெடிகுண்டு அல்ல, வெங்காய வெடி என்பதை தற்போது ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள் நிரூபித்துள்ளன. ஹனீப்பும், அவரது சகோதரர் சொயீப் ஹனீப்பும் சாட்டிங் மூலம் பேசியதன் முழு விவரத்தையும் ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள் இன்று வெளியிட்டுள்ளன.
ஹனீப்பின் வக்கீல்கள்தான் இந்த சாட்டிங் பேச்சை பத்திரிகைகளுக்கு கொடுத்துள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளைப் பார்த்தால், ஆண்ட்ரூஸ் கூறியதைப் போல தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக எந்த தகவலும் இவர்களுக்கு இடையே பரிமாறிக் கொள்ளப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.
ஹனீப்பின் பெயரைத் தொடர்ந்து கெடுக்கும் வகையில் பேசி வரும் கெவின் ஆண்ட்ரூஸின் முகத்திரையைக் கிழிக்கும் வகையில் இது வெளியிடப்பட்டுள்ளதாக ஹனீப்பின் வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.
முன்பு அமைச்சர் ஆண்ட்ரூஸ் வெளியிட்ட சாட்டிங் பேச்சில், சொயீப் ஹனீப், முகம்மது ஹனீப்பிடம், உனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று மட்டும் அவர்களிடம் கூறு, வேறு எதையும் கூறாதே என்று கூறியதாக அமைச்சர் தெரிவித்திருந்தார். அவர்கள் இருவரும், இங்கிலாந்து தாக்குதல் தொடர்பாகத்தான் பேசியுள்ளனர் என்று இதன் மூலம் தெரிவதாக கூறியிருந்தார் ஆண்ட்ரூஸ்.
ஆனால் ஹனீப்பின் வக்கீல்கள் வெளியிட்டுள்ள முழுமையான சாட்டிங் பேச்சில் முழு விவரமும் உள்ளது. அதில், சொயீப் கூறுகையில், ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறை அதிகாரி டோனி வாக்கரை உடனடியாக தொடர்பு கொள்ளவும் என்று கூறியுள்ளார்.
அதற்கு ஹனீப், நானும் அதற்குத் தான் முயன்று கொண்டிருக்கிறேன். ஆனால், என்னால் அவரது தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறுகிறார்.
அதற்கு சொயீப் கூறுகிறார், அவரிடம் உனது தொலைபேசி எண்ணைத் தெரிவித்துவிட்டு இந்தியாவுக்கு வா வரவும் என்று கூறுகிறார்.
அதன் பின்னரும் பிரிட்டிஷ் போலீஸாரை தொடர்பு கொள்ள பலமுறை முயன்றுள்ளார் ஹனீப். ஆனால் முடியவில்லை. இதற்கான ஆதாரமும் உள்ளது.
மேலும், இங்கிலாந்துத் தாக்குதலுக்கு முன்பாகவே தனது இந்தியப் பயணத்தைத் திட்டமிட்டிருந்த ஹனீப் அதற்காக மருத்துவமனை நிர்வாகத்திடமும் விடுமுறை கோரியிருந்தார் என்றும் அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹனீப் சகோதரர்கள் பேசியதில் சில பகுதிகளை மட்டும் வெட்டி ஒட்டி, படிப்பவர்களுக்கு சந்தேகம் எழும் வகையில் ஆண்ட்ரூஸ் தகவல் வெளியிட்டதாகவும் வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.