தலையில் விழுந்த சூட்கேஸ்-ரூ.1 லட்சம்நஷ்டஈடு தர ஏர்-இந்தியாவுக்கு உத்தரவு
டெல்லி:விமானம் தரையிறங்கும் போது லக்கேஜ் பகுதியில் இருந்து பெட்டி ஒன்று பயணியின் தலையில் விழுந்ததற்காக அவருக்கு ரூ.1 லட்சம் நஷ்டஈடு கொடுக்க ஏர் இந்தியா நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2000ம் வருடம், மகிஜா என்பவர் போபாலிருந்து ஏர்-இந்தியா விமானம் மூலம் கொல்கத்தாவிற்கு சென்றார். விமானம் தரையிறங்கும் போது மேலிருந்த லக்கேஜ் வைக்கும் பகுதியின் கதவு தானாக திறந்து கொண்டது.
அதிலிருந்து பெட்டியொன்று மகிஜாவின் தலையில் விழுந்துள்ளது. இதனால் மயக்கமடைந்த அவர் பின்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதையடுத்து, விமான நிறுவனத்தின் சேவை சரியில்லை. மயக்கமடைந்த தன்னை சரியாக கவனிக்கவில்லை என்று கூறி டெல்லி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் மகிஜா.
மனுவில், தனது தலைமீது சூட்கேஸ் விழுந்ததால் தனக்கு தலையின் உட்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு இதுநாள்வரை தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
ஏர் இந்தியா சார்பில் தரப்பட்ட விளக்கத்தில், சூட்கேஸ் விழுந்தது தற்செயலாக நடந்தது தான். வேறொரு பயணி அவரது உடைமைகளை வைக்கும் போது கதவை சரியாக மூடாததால் இது நிகழ்ந்துள்ளது. இதற்கு ஏர்-இந்தியா நிறுவனம் பொறுப்பு கிடையாது என்று வாதிடப்பட்டது.
இதை விசாரித்த நீதிமன்றம் 7 வருடங்களுக்கு பின்பு தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. ஏர் இந்தியா தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், மற்ற பயணி லக்கேஜை வைத்த பின்பு கதவை சரியாக மூடியுள்ளாரா இல்லையா என்று சரிபார்ப்பது விமான நிறுவன ஊழியர்களின் வேலை.
இதற்கு பயணிகள் எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். மனுதாரர் தலையில் பெட்டி விழுந்ததற்கு இதுவரை ரூ.45,000 செலவழித்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
எனவே அவருக்கு ரூ.1 லட்சம் நஷ்டஈடு தொகையினையும், இந்த வழக்கிற்கு ஆன செலவையும் ஏர்-இந்தியா நிறுவனம் கொடுக்க வேண்டும்.
மேலும் விமானத்திற்குள் பயணிகள் எடுத்து செல்லும் ஹேண்ட் லக்கேஜ் 5 கிலோவுக்குள் இருக்குமாறு விமான நிறுவனங்கள் பார்த்து கொள்ள வேண்டும். அப்போதுதான் இது மாதிரியான அசம்பாவிதங்கள் நிகழ்வதை தவிர்க்கமுடியும் என்று அறிவுரை கூறி தீர்ப்பளித்தனர்.