வேலையில்லா பட்டதாரிகளுக்கு சிறப்பு பயிற்சி
சென்னை:வேலை வாய்ப்பில்லாத இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அரசு வழங்கி வரும் வேலை வாய்ப்பு நிவாரண உதவித் தொகை பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு சிறப்பு திறன் பயிற்சி கொடுக்கவுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயா அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுபவர்களுக்கு மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் பேருக்கு மத்திய அரசு உதவியுடன் வேலைவாய்ப்பு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. சென்னை மாவட்டத்திலும் இந்த திட்டம் செயல்படுத்தவுள்ளது.
இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தங்கள் பதிவை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். கல்வித் தகுதி 10 அல்லது 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
வேலை வாய்ப்பற்றோர் உதவி தொகை பெறுபவர்கள் மட்டும்தான் இதில் கலந்து கொள்ள முடியும். இதில் கலந்து கொள்ள எஸ்.சி, எஸ்.டி இனத்தவர்களுக்கு அதிக பட்ச வயது வரம்பு 45 ஆகும்.
இந்த பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, அரசு ஐடிஐ-ல் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பயிற்சி கொடுக்கப்படும்.
தேர்ந்தெடுக்கும் பயிற்சிக்கு ஏற்ப தினமும் 3 மணி நேரம் வீதம் மொத்தம் 60 மணி நேரத்திலிருந்து 320 மணி நேரம் வரை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் கொடுக்கப்படும். இந்த பயிற்சியில் சேருபவர்கள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
இந்த பயிற்சியில் சேருபவர்களுக்கு வேலைவாய்ப்பு உதவித் தொகை தொடர்ந்து கொடுக்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வரும் வேலை வாய்ப்பும் பாதிக்கப்படாது.
இந்த பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள் மற்றும் வேலை வாய்ப்பு நிவாரண உதவி தொகை பெறுவதற்கான ஆதாரங்களோடு வரும் ஆகஸ்ட் 23 மற்றும் 24ம் தேதிகளில் காலை 11 மணிக்கு கிண்டியில் உள்ள அரசினர் ஐடிஐயில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று கலெக்டர் ஜெயா கூறியுள்ளார்.