ரயில்வே சொத்து சேதம்-வீரபாண்டி ஆறுமுகத்தைபதவி நீக்கம் செய்ய ஜெ கோரிக்கை
சென்னை:ரயில் மறியல் போராட்டம் என்ற பெயரில் ஆளும் திமுகவினர் ரயில்வே சொத்துக்களை சேதமாக்கிவிட்டனர் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
![]() |
சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு ரயில்வே கோட்டம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்துக்கே இடம் கிடையாது. சேலம் ரயில்வே கோட்டம் விரைவாக அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நான் ஏற்கனவே பல அறிக்கைகள் வெளியிட்டிருந்தேன்.
இது மட்டுமல்ல, அதிமுக சார்பில் ஜனநாயக முறையில், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தாமல் 2 முறை கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டுள்ளது.
ஆனால், சேலம் ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டும் என்று கடந்த 25ம் தேதியன்று திமுகவினர் சேலம், கோவை, ஈரோடு, பொள்ளாச்சி மற்றும் நெல்லையில் ரயில் மறியல் போராட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டத்தில் பாமக, காங்கிரஸ் உட்பட திமுகவின் தோழமைக் கட்சிகளும் கலந்து கொண்டன.
இந்த ரயில் மறியல் போராட்டத்தில் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தலைமையேற்று வன்முறையை தூண்டிவிட்டது இதுவரை அரசியல் வரலாற்றில் நடக்காத ஒன்றாகும்.
இந்தப் போராட்டத்தின் போது சைகை காட்டும் கருவியை நொறுக்கியது, தண்டவாளத்தை பெயர்த்து எடுத்தது, தண்டவாளத்தில் மணலை கொட்டியது, சில ரயில் என்ஜின்களின் மீது கற்களை வீசி சேதப்படுத்தியது, தண்டவாளத்தின் குறுக்கே கட்டைகளை போட்டு சேதப்படுத்தியது போன்ற ஜனநாயகத்திற்கு முற்றிலும் புறம்பான வன்முறைக் காட்சிகள் அரங்கேறின.
போராட்டத்தை திரும்பப் பெற்றுவிட்டாலும் திமுக அமைச்சரின் வன்முறை, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் போன்ற அடாவடி செயல்களால், பல மணி நேரம் காலதாமதமாகத்தான் ரயில்கள் புறப்பட்டன.
இந்த வன்முறையில் ஈடுபட்ட திமுக அரசின் அமைச்சர் மீதோ அல்லது திமுகவினர் மீதோ காவல் துறையினர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை எதிர்க்கட்சியினர் யாராவது செய்திருந்தால் அவர்கள் மீது வழக்கு போடாமல் விட்டிருப்பார்களா
அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தும்போது, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால் அதற்குரிய நஷ்டத்தை அந்தந்த அரசியல் கட்சிகள் தான் ஏற்க வேண்டும் என்று எனது ஆட்சிக் காலத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் கருணாநிதி எனது ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்த மேற்படி சட்டத்தை நீக்கி விட்டார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில், மத்திய அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியினரைவிட, அதிக அமைச்சர்களை பெற்றிருக்கும் கட்சி திமுக. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கட்சியைச் சேர்ந்த மாநில அமைச்சர் ஒருவர் மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்துவது எங்கும் கண்டிராத ஒன்றாகும்.
இதற்கிடையில் பிரச்சனை விஸ்வரூபமாக வெடித்ததைக் கண்ட மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் லாலு, ரயில்வே கோட்டம் கண்டிப்பாக அமையும் என்று உறுதி அளித்துள்ளதால், 150 நிமிட ரயில் மறியல் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாக கருணாநிதி அறிவித்திருக்கிறார்.
சேலம் ரயில்வே கோட்டம் பிரச்சனையில் ரயில் மறியல் போராட்டம் என்ற பெயரில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் உண்டாக்கியது ஏன் அதற்கு பதிலாக ரயில்வேத் துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவிடம் பேசி போராட்டம் நடத்தாமலேயே உறுதிமொழியை பெற்றிருக்கலாமே
பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், வன்முறையில் ஈடுபடுதல் போன்ற சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் எதிரான நடவடிக்கைகளை கைவிட்டுவிட்டு, சேலம் ரயில்வே கோட்டம் விரைவில் அமைய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ஒரு பொறுப்புள்ள அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு, தான் இந்திய அரசியல் சட்டத்தின் முன் செய்த பதவி பிரமாணத்திற்கு விரோதமாக, சட்டத்திற்கு புறம்பாக, ஜனநாயகத்திற்கு எதிரான வன்முறை செயலில் ஈடுபட்டு, அதன் மூலம் பொதுமக்களுக்கு இடைஞ்சலை உண்டாக்குவது இதுவரை கேட்டிராத செயல்.
இது போன்ற கேலிக்கூத்தான, ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கின்ற செயலுக்கு அனைத்திந்திய அதிமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜனநாயகத்திற்கு விரோதமாக, பொதுச் சொத்திற்கு சேதம் விளைவித்த வீரபாண்டி ஆறுமுகம் மந்திரி சபையில் இருப்பதற்கு தகுதியற்றவர். இதுவரை உடனடியாக மந்திரி சபையிலிருந்து நீக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டு கொள்கிறேன் என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.













Click it and Unblock the Notifications