நடிகரின் காரை திருடிய பி.ஏ.:கிரிவலம் போனபோது கைவரிசை
சென்னை:நடிகர் பாலா திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்றிருந்தபோது அவரது உதவியாளரே, பாலாவின் காரைத் திருடிக் கொண்டு தலைமறைவானார். ஆனால் காரிலிருந்து புகை வந்ததால் பயந்து போய் காரை விட்டு விட்டு ஓடி விட்டார்.
அன்பு படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் பாலா. தொடர்ந்து கலிங்கா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது மஞ்சள் வெயில் படத்தில் இரு ஹீரோக்களில் ஒருவராக நடித்து வருகிறார்.பாலா மாதந்தோறும் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்வது வழக்கம். 2 நாட்களுக்கு முன்பும் அவர் தான் வாங்கிய விலையுயர்ந்த புதிய காரில் திருவண்ணாமலைக்குக் கிளம்பினார். அவருடன் உதவியாளர் ரகுவும் சென்றார்.
மாலை 5 மணியளவில் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வந்து சேர்ந்த பாலா, காரை ரகுவிடம் ஒப்படைத்து விட்டு கிரிவலம் சென்றார். இரவு 9 மணிக்கு கிரிவலத்தை முடித்துக் கொண்டு கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு வந்தார். ஆனால் கார் அங்கு இல்லை, ரகுவையும் காணவில்லை.
சிறிது நேரம் காத்திருந்து பார்த்தார் பாலா. பின்னர் ரகுவின் செல்போனைத் தொடர்பு கொண்டார். ஆனால் வேறு ஒரு நபர் பேசினார், பாலா தனது பெயரைச் சொன்னதும் அந்த நபர் போனைத் துண்டித்தார்.
இதனால் சந்தேகமடைந்த பாலா, போலீஸை அணுகி புகார் கொடுத்தார். இதையடுத்து கார் கடத்தப்பட்டிருக்கலாம் என யோசித்த போலீஸார் திருவண்ணாமலையின் எல்லைப் பகுதி காவல் நிலையங்களை உஷார்படுத்தி தீவிர கண்காணிப்பை முடுக்கி விட்டனர்.
அதற்கு நல்ல பலன் இருந்தது. பெங்களூர் நோக்கிச் செல்லும் சாலையில், பாலாவின் கார் போனதைப் பார்த்ததாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து பாலாவுடன் போலீஸார், அங்கு விரைந்தனர்.
ஊத்தங்கரையைத் தாண்டி சிறிது தூரம் சென்றபோது பாலாவின் கார் சாலையேராம் நிறுத்தப்பட்டிருந்ததைப் பார்த்தனர். காரில் யாரும் இல்லை. என்ஜினிலிருந்து புகை வந்து கொண்டிருந்தது.
காருடன் சென்ற ரகுவும், அவரது நண்பரும், காரிலிருந்து புகை வருவதைப் பார்த்தவுடன் இறங்கி ஓடியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். அவர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.