இப்போதைக்கு புல்லட் ரயிலுக்கு வாய்ப்பில்லை- வேலு
டெல்லி:இந்தியாவில் புல்லட் ரயிலை விரைவில் அமல்படுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை. அதுகுறித்து ஆய்வுகளை முடிக்கவே 2 ஆண்டுகள் பிடிக்கும் என்று மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு கூறியுள்ளார்.
இது குறித்து ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், 2007-08ம் ஆண்டு நிதி அறிக்கையில் அதிவேக புல்லட் ரயிலை அமல்படுத்துவது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
புல்லட் ரயிலை கொண்டு வருவதற்கு முன்பு நிறைய முன்னேற்பாடுகளையும், வசதிகளையும் செய்ய வேண்டியுள்ளது. அதற்குரிய சிக்னல், கட்டுப்பாடு அறைகள் ஆகியவை அமைக்க வேண்டும்.
இந்தியாவில் வடக்கு, மேற்கு, தெற்கு மற்றும் கிழக்குப் பிராந்தியங்களில் தலா ஒரு புல்லட் ரயில் பாதை அமைப்பது தொடர்பான சாத்தியக் கூறுகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்.
இந்த ஆய்வுப் பணிகள் 2 ஆண்டுகளில் முடிவடையும் என எதிர்பார்க்கிறோம். எந்தப் பாதைகளில் புல்லட் ரயில்களை இயக்குவது என்பது குறித்து முடிவு எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. அனைத்து ஆய்வுகளும் முடிந்த பின்னர்தான் இந்தப் பணி மேற்ெகாள்ளப்படும்.
கர்நாடகத்தில் பெங்களூர் - ஹூப்ளி, பெங்களூர் - மைசூர் இடையே புல்லட் ரயில் இயக்கப்பட வேண்டும் என அந்த மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது என்றார் வேலு.
தமிழகத்தில் சென்னையிலிருந்து மதுரைக்கும், கோவைக்கும் புல்லட் ரயில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி முன்பே கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.