சந்திரிகா திடீர் சென்னை வருகை
சென்னை:
இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா 2 நாள் பயணமாக இன்று காலை சென்னைக்கு வந்தார்.
தனிப்பட்ட முறையில் சந்திரிகா இந்தியா வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 நாட்கள் சென்னையில் தங்கும் சந்திரிகா, தனது சென்னை பயணத்தை முடித்துக் கொண்டு வருகிற 13ம் தேதி டெல்லி செல்கிறார்.
சந்திரிகா வருகையையொட்டி விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விமான நிலையத்திற்கு வெளியே வந்த சந்திரிகாவை சந்திக்க செய்தியாளர்கள் விரைந்தனர். ஆனால் அவர்களிடமிருந்து தப்பி தயாராக நின்ற காரில் ஏறிப் பறந்து விட்டார் சந்திரிகா.
முன்னதாக சந்திரிகா வருவதற்கு முன்பு விமான நிலையத்தில் இரண்டு இலங்கைப் பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த இரு பெண்களும் சந்திரிகாவை பேட்டி காண வந்திருந்த செய்தியாளர்களிடம் போய் சத்தமாக பேசிக் கொண்டிருந்தனர்.
இதைப் பார்த்து குழப்பமடைந்த போலீஸார் விரைந்து வந்து அந்தப் பெண்களிடம் என்ன என்று கேட்டனர். அதற்கு அவர்கள் இருவரும், நாங்கள் சில நாட்களுக்கு முன்பு இலங்கையிலிருந்து சென்னைக்கு வந்தோம். ஆனால் இங்கு வந்த போது எங்களது சூட்கேஸ்களைக் காணவில்லை. இதுகுறித்து பத்திரிக்கையாளர்களிடம் புகார் கூறிக் கொண்டிருப்பதாக தெரிவித்தனர்.
இதைக் கேட்டு கடுப்பான கியூ பிரிவு போலீஸார், சூட்கேஸ் காணாமல் போனால் உரிய அதிகாரிகளிடம் போய் புகார் கூற வேண்டும். இப்படியெல்லாம் பத்திரிக்கையாளர்களிடம் புகார் கூறக் கூடாது என்று கூறி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்த இரு பெண்களால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.