சிறுபான்மையினர் இடஒதுக்கீடு: கருணாநிதிக்குbr/பாமக, காங் பாராட்டு- பாஜக எதிர்ப்பு:
சென்னை:
முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தலா 3.5 சதவீத இட ஒதுக்கீட வழங்கும் முதல்வர் கருணாநிதியின் அறிவிப்புக்கு சிறுபான்மையினர் அமைப்புகள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து முதல்வரைப் பாராட்டியுள்ளனர்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முதல்வர் கருணாநிதியின் அவசரச் சட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது. இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினரின் கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் மேலும் உயரும் என்று கூறியுள்ளார் கிருஷ்ணசாமி.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிறுபான்மை மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாமக நீண்ட காலமாகவே கோரி வருகிறது.
எங்களது தேர்தல் அறிக்கையிலும் இதைக் கூறியிருந்தோம். நெல்லை, திருச்சி, ஈரோட்டில் நடந்த வாழ்வுரிமை மாநாட்டையும் நடத்தினோம்.
தற்போது இதற்கென அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். இதற்கு பாமக சார்பில் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொைஹதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சிறுபான்மை மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்றுக் கொண்டு நிறைவேற்றி உள்ளதற்கு இதயம் திறந்த வாழ்த்தினையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக அரசுக்கும், முதல்வர் கருணாநிதிக்கும் ரமலான் முதல் நாளில், வெள்ளி ஜூம் ஆ தொழுகையில், முஸ்லீம் சமுதாயம் நன்றி தெரிவித்து அறிவிப்புச் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
இஸ்லாமிய இலக்கிய கழகம், தமுமுக, தமிழ் மாநில தேசதிய லீக், சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவை, தமிழ் மாநில தேசிய லீக், ஈமான் தமிழ் இலக்கியப் பேரவை, தமிழ்நாடு முஸ்லீம் தொண்டு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும் முதல்வருக்கு நன்றிகளைத் தெரிவித்துள்ளன.
இதேபோல மாநில சிறுபான்மையினர் நல வாரியத் தலைவர் பாதிரியார் சின்னத்துரை, தமிழக ஆயர் பேரவை, இந்திய சமூக நீதி இயக்கத் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம் ஆகியோரும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளன.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமாரும் முதல்வர் அறிவிப்பை பாராட்டி வரவேற்றுள்ளார்.
பாஜக எதிர்ப்பு:
அதேசமயம், வாக்கு வங்கியை மனதில் கொண்டு தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. இது செல்லாது.
அனுபவம் வாய்ந்த முதல்வர் கருணாநிதி இப்படி ஒரு அவசரச் சட்டத்தைப் பிரயோகித்திருப்பது ஆச்சரியம் தருகிறது என்று பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
கருணாநிதிக்கு தமுமுக நன்றி:
முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக முதல்வருக்கு தெரிவிக்கும் விதமாக வரும் மக்களவை தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளிக்கப்படுவதாக தருவதாக தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழக செயலாளர் தமிமின் கூறியுள்ளார்.
இதுகறித்து திருவாரூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தமிழகத்தில் உள்ள முஸ்லீம், கிறிஸ்தவர்களுக்கு கல்வி வேலை வாய்ப்பில் 3.5 சதவிதம் தனி இட ஒதுக்கீட்டை தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வரும் மக்களவை தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு தருவோம்.
வரும் கலத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்குவதற்கு உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். செப்டம்பர் 15 ம் தேதி தமுமுகவின் மாநில நிர்வாகிள் கூட்டத்தில் முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக முதல்வருக்கு தெரிவிக்கும் விதமாக பாராட்டுக் கூட்டம் நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.