வடிவேலுவை அடித்த விஜயகாந்த் வீட்டுbr/வாட்ச்மேன் உள்பட 6 பேர் கைது
சென்னை:
நடிகர் வடிவேலுவை தாக்கியதாக நடிகர் விஜயகாந்த் வீட்டு வாட்ச்மேன் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
நடிகர் விஜயகாந்த் வீடு சென்னை சாலிகிராமம் கண்ணபிரான் தெருவில் உள்ளது. அவரது தங்கை திருமலா. இவரது வீடு காவேரி தெருவில் உள்ளது. இதையடுத்த வேதவள்ளி தெருவில் நடிகர் வடிவேலுவின் அலுவலகம் உள்ளது.
திருமலாவின் கணவர் முத்துராமன் உடல் நலக்குறைவால் 2 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து துக்கம் கேட்க மதுரையிலிருந்து உறவினர்கள் வந்திருந்தனர். மேலும் தேமுதிக தொண்டர்களும், விஜயகாந்த் ரசிகர்களும் கூடினர்.
இவர்கள் தங்களது கார்களை அந்தத் தெருவிலும், வடிவேலுவின் அலுவலகம் உள்ள பகுதியிலும் நிறுத்தி வைத்திருந்தனர். அப்போது அதிகாலையில் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த வடிவேலு, தனது அலுவலகத்திற்கு முன்பு கார்கள் இருந்ததைப் பார்த்து அவற்றை நகர்த்துமாறு கூறியுள்ளார்.
வடிவேலு அப்போது போதையில் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் வடிவேலு சத்தம் போட்டுத் திட்டியுள்ளார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த விஜயகாந்த் ரசிகர்கள் வடிவேலுவை அடித்துள்ளனர்.
இந்த விவகாரம் பின்னர் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்திற்குச் சென்றது. அங்கு இரு தரப்பினரும் பரஸ்பரம் புகார் கூறி புகார் மனு கொடுத்தனர்.
இதன் பேரில் இரு புகார்களையும் பதிவு செய்த போலீஸார், வடிவேலுவையும், விஜயகாந்த்தின் மேலாளர் சதீஷ்குமாரையும் அழைத்து விசாரித்தனர்.
இதையடுத்து இரவோடு இரவாக சதீஷ்குமார் உள்ளிட்ட 10 பேர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந் நிலையில் இப்போது விஜயகாந்த் வீட்டு வாட்ச்மேன் ராதாகிருஷ்ணன் (39), தட்சிணாமூர்த்தி, (23), சையது அலி (30), சரவணன் (26), தயாளன்(24) மற்றும் கிருஷ்ணன் (34) ஆகியோரை போலீஸார் திடீரெனக் கைது செய்தனர்.
கைதானவர்களில் இருவர் விஜயகாந்தின் கட்சி அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள். 3 பேர் தே.மு.தி.க நிர்வாகிகள் ஆவர்.
விஜயகாந்த் மாநாட்டை முடித்துக் ெகாண்டு ஊர் திரும்பிய பிறகு தகுந்த நடவடிக்கையில் இறங்கப் போவதாக தேமுதிகவினர் கோபத்துடன் கூறியுள்ளனர்.
ஏன் சண்டை?
விஜயகாந்த்துக்கும், வடிவேலுவுக்கும் இடையே சில காலமாகவே பெரும் பூசல் நிலவி வருகிறது. விஜயகாந்த்தின் படம் ஒன்று பெரும் வெற்றி பெற்றபோது, அதற்கு வடிவேலுதான் காரணம் என சினிமா உலகில் பேசப்பட்டது.
இது விஜயகாந்த்தை கடுப்பாக்கி விட்டது. இதையடுத்து தனது படங்களில் வடிவேலு வேண்டாம் என்று விஜயகாந்த் கூறி விட்டாராம். இதனால் வடிவேலு இல்லாமலேயே விஜயகாந்த் படங்கள் சமீபகாலமாக வந்தன.
அந்தப் படங்கள் சரியாக போகவில்லை. இந் நிலையில் மீண்டும் விஜய்காந்தை தனது படத்தில் நடிக்க விஜய்காந்த் அழைத்தபோது அவர் போகவில்லையாம்.
இதனால் இருவரும் ஒருவர் மீது ஒருவர் கோபத்தில் இருந்தனர். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வடிவேலுவுக்கும், விஜயகாந்த்துக்கும் இடையே நேரடியாகவே ஒரு மோதல் நடந்ததாகவும், அப்போது வடிவேலுவை விஜயகாந்த் அடித்ததாகவும் கூட கோடம்பாக்கத்தில் பரபரப்பபாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போதைய மோதல் மூண்டுள்ளது. இந்த மோதல் குறித்து வடிவேலு வளசரவாக்கம் இன்ஸ்பெக்டர் அழகேசனிடம் விளக்கியுள்ளார்.
அதில், எனது வளர்ச்சி விஜயகாந்த்துக்குப் பிடிக்கவில்லை. என் மீது அவர் காழ்ப்புணர்ச்சியோடு இருந்தார். 3 படங்களில் நடிக்க கூப்பிட்டார். நான் போகவில்லை. இதனால் என் மீது கோபமாக இருந்தார்.
அவர் மட்டுமல்லாது அவரைச் சார்ந்தவர்களும் என்னை எதிரி போல பார்த்தனர். விஜயகாந்த் வீட்டைத் தாண்டித்தான் நான் தினசரி எனது வீட்டிலிருந்து போக வேண்டும்.
அப்படிப் போகும் போது, தினசரி பத்து பேர், விஜயகாந்த் வீட்டு முன்பு நின்று கொண்டு என்னைப் பார்த்து கேலி செய்வார்கள், சத்தம் போடுவார்கள். கிண்டலடிப்பார்கள்.
இப்போதும் அப்படித்தான் விஜயகாந்த்தின் மேலாளர் சதீஷ்குமாரும், விஜயகாந்த்தின் ஆதரவாளர்களும் சேர்ந்து என்னை அசிங்கமாக திட்டி அவமானப்படுத்தினர், அலுவலகம் மீதும் தாக்குதல் நடத்தினர்.
அவர்களிடமிருந்து காப்பாற்றிய எனது உதவியாளர்கள் பத்திரமாக என்னை அழைத்துச் சென்றனர். அப்போது சதீஷ்குமாரும், வேறு சிலரும் சேர்ந்து என்னை அடித்தனர் என்று கூறியுள்ளாராம் வடிவேலு.