For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சேது கால்வாய்: இலங்கையுடன் சேர்ந்து சதிbr/செய்வோரை வெல்வோம் - கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News


ஈரோடு:

இலங்கையுடன் சேர்ந்து சேது சமுத்திரத் திட்டத்தை தடுக்க முயலுவோரின் சதிச் செயல்களை முறியடித்து அந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

Karunanidhiஈரோட்டில் திமுக முப்பெரும் விழா நேற்று நடந்தது. அதில் கலந்து கொண்டு முதல்வர் கருணாநிதி பேசுகையில்,

திராவிட இயக்கத்தை வீழ்த்துவதற்காக நடைபெறுகின்ற முயற்சிகளில் ஒன்றாக நாம் நிறைவேற்ற இன்றைக்கு முனைந்திருக்கின்ற ஒரு பெரிய திட்டத்தை குழி தோண்டிப் புதைக்க சில குள்ளநரிகள், சில சூழ்ச்சிக்காரர்கள், சில குடிலர்கள் முயற்சி மேற்கொண்டிருப்பதை நம்முடைய இனமானப் பேராசிரியர் அன்பழகன் விளக்கமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

சேது சமுத்திரத் திட்டம் பற்றி உங்களுக்கு தெரியும். அந்தத் திட்டத்தை நிறைவேற்ற நாங்கள் பட்டபாடும் உங்களுக்கு தெரியும். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக அண்ணா முதல்வராக இருந்த போது எழுச்சி நாள் நடத்தினார்.

நாம் நம்முடைய தேர்தல் அறிக்கைகளிலே எல்லாம் சேது சமுத்திரத் திட்டத்தை வலியுறுத்தினோம். அப்படி வலியுறுத்தி, நம்முடைய நல்ல காலமோ அல்லது தமிழ்நாட்டு மக்களுடைய நல்ல காலமோ. இந்தியாவின் தலைமைப் பொறுப்பில் டாக்டர் மன்மோகன்சிங்கும், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி அம்மையார் பொறுப்பேற்றது முதல் அவரிடம் வாதாடி, வலியுறுத்தி பல விளக்கங்களை கொடுத்தோம்.

இந்தத்திட்டம் நிறைவேறினால் எவ்வளவு தொலைவு பயணம் மிச்சமாகும். இலங்கையை சுற்றிக் கொண்டு போகின்ற நேரம் மிச்சமாகும். நம்முடைய வாணிபம் வெளிநாடுகளில் எப்படி பரவும், வெளிநாடுகளுக்கும், திராவிடத்துக்கும் உரிய அந்தக் கால தொடர்புகள் மீண்டும் வருமா வராதா என்ற விளக்கங்களை எல்லாம் அவர்களுக்கு அளித்து, அதனை நிறைவேற்றுகின்ற அனுமதியை மத்திய அரசு நமக்கு தந்தது.

ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவழித்து தமிழகத்தினுடைய, தென்னகத்தினுடைய பொருளாதாரம் முன்னேறினால் இந்தியாவின் பொருளாதாரமும் வளரும் என்ற நோக்கத்தோடு அமைக்கப்பட்டுள்ள அந்தத் திட்டத்திற்கான அனுமதியை பெற்று அந்தப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இலங்கைக்காரன் ரகசியமாகச் சொன்னானோ என்னவோ, இந்த திட்டம் நிறைவேறினால் எங்களுக்கு கஷ்டம், தமிழ்நாடு முன்னேறிவிடும் என்ற பயத்தின் காரணமாக இலங்கைக்காரனின் ரகசியப் பேச்சைக் கேட்டோ அல்லது தமிழகம் எந்த காலத்திலும் இனி வளம் பெறக்கூடாது, இது தரைமட்டமாக வேண்டும் என்கின்ற கொடுங்குணத்தின் காரணமாகவோ இந்த திட்டத்தைத் தடுக்க ஒரு ஆளை பிடித்தார்கள்.

யார் அவர்? அவர் பெயர் ராமராம். 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தாராம். அந்த ராமர் கட்டிய பாலம் அங்கே உள்ளது. அதை தொடாதே என்கிறார்கள். யார் ராமன்? எந்த பொறியியல் கல்லூரியிலே படித்து பொறியாளராக பட்டம் பெற்றவன்? எப்போது பாலத்தை கட்டினான்? ஆதாரங்கள் உண்டா? கிடையாது.

தமிழ்நாட்டு மக்கள், பொதுவாக, இந்திய மக்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்கள். அவர்களிடத்திலே எதையும் சொல்லலாம், அவர்கள் எதையும் நம்புவார்கள். அந்த நம்பிக்கையை வைத்தே அவர்களின் கழுத்தை அறுத்து விடலாம். இந்த நம்பிக்கை இருக்கின்ற காரணத்தினாலே தான் இன்றைக்கு இந்தியாவில் நரபலிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

இன்றைக்கு பால்ய விவகாரங்கள் நடப்பது இந்த மூட நம்பிக்கையினால் தான். கணவன் இறந்தால் அவனோடு சேர்ந்து உடன்கட்டை ஏற்றுகின்ற பழக்கம் இன்னமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அப்படிப்பட்ட மூட, மடத்தனமான, மத வாதங்களை இன்றைக்கும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையின் காரணமாக ராமன் பெயரை இழுத்து அவர்கள் இன்றைக்கு நம்மோடு விளையாடுகிறார்கள். யாரோடு எங்கே பெரியார் பிறந்தார் அன்று, அங்கே கூடியிருக்கிறோமோ, இந்த ஈரோட்டு குருகுலத்தில், நம்மையெல்லாம் ஆளாக்கிய இந்த குருகுலத்தில் இன்னும் பெரியாருடைய புகழ் மங்கவில்லை.

அது ஓங்கி உயர்ந்து கொண்டிருக்கிறது. அது ஒளிவிட்டுக் கொண்டிருக்கிறது. தமிழகத்திலே மட்டும் கிடையாது, உலகம் முழுவதும் ஒளிவிட்டுக் கொண்டிருக்கின்ற பெயர் பெரியாருடைய பெயர். இந்த புரட்சித் தலைவர் - புரட்சிக்காரர், அந்த பெரியார் வாழ்ந்து நம்மையெல்லாம் அவருடைய சுயமரியாதை இயக்கத்தின் வடிவங்களாக உருவாக்கிவிட்டு, உருவங்களாக அமைத்துவிட்டு, வழித்தோன்றல்களாக ஆக்கிவிட்டு சென்றிருக்கின்ற பெரியார் பிறந்த இந்த பூமியிலிருந்து இன்றைக்கு நமக்கு ஏற்பட்டிருக்கின்ற எதிர்காலத்தில் இருள் மயமாக ஆக்குகின்ற ஒரு பயங்கரமான சதித்திட்டத்தை முறியடிப்பதற்கு ஒரு தீர்மானத்தை உங்கள் முன் நான் இப்போது முப்பெரும் விழாவிலே கொண்டு வருகிறேன்.

ஏறத்தாழ நூற்றாண்டு காலக் கனவாகவும், திராவிட இயக்கத்தின் தனிப்பெரும் கோரிக்கைகளில் ஒன்றாகவும் இருந்து வந்த சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற இன்றைய மத்திய ஆட்சியின் பிரதமர் மன்மோகன்சிங்கும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியும் பேருதவி புரிந்து இந்த திட்டத்தை நிறைவேற்ற முன்வந்துள்ள நிலையில் அதனைக் கெடுத்து தென்னக மக்களுடைய பொருளாதார வளம் பெருகிட ஒரு சில மதவாத அமைப்புகள் குறுக்கே நிற்பதற்கு, மத்திய அரசு அஞ்சி அதற்கு இடம் தரக்கூடாது. மதவாத மூட நம்பிக்கைகளை வேரோடு களையப் போரிட்ட ஈரோடு தந்த வள்ளல் பெரியார் பிறந்த மண்ணிலேயிருந்து இந்த மாபெரும் கூட்டத்தின் வாயிலா தென்னக மக்களின் சார்பில் குரல் கொடுக்கிறோம் என்பதை தீர்மானமாக நிறைவேற்றுகிறோம்.

இதை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். இந்த தீர்மானத்தை மத்திய அரசு மதித்து நடக்க வேண்டும். தமிழ் மக்களும் இந்தியாவின் ஒரு பகுதியினர் தான் என்பதை எண்ணிப் பார்த்து மத்திய அரசு செயல்பட வேண்டும்.

பெரியார் இந்த நகரத்தின் தலைவராக பொறுப்பேற்றிருந்த போது, நகராட்சி மன்றத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. எப்போது தெரியுமா, 1917ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி, பெரியார் பிறந்த நாளும் 17ம் தேதி, நான் நினைவூட்டுகின்ற கூட்டம் நடைபெற்ற நாளும் 17ம் தேதி. இந்த 17ம் தேதியில் நடைபெற்ற கூட்டத்தில் நடைபெற்றதைப்பற்றி நான் இங்கே அறிவிக்கப்போவதை கேட்டு நீங்கள் பெரும் மகிழ்ச்சி அடைவீர்கள்.

அன்றைக்கு ஈரோடு நகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்னவென்றால், ஈரோடு நகரம் இன்னும் விரிவு படுத்தப்பட வேண்டும். ஈரோடு நகரத்தை விரிவுபடுத்தி அதை மேலும் வளர்க்க வேண்டும் என்ற தீர்மானத்தை 1917ம் ஆண்டு நகராட்சி மன்றத் தலைவராக இருந்த தந்தை பெரியார் நிறைவேற்றியிருக்கிறார்.

இத்தனை ஆண்டுகாலம் அந்த தீர்மானத்தின்படி எந்த செயலாக்கமும் நடைபெறவில்லை. இன்றைக்கு பெரியார் கண்டகனவை நிறேவற்றுகின்ற வகையில், பெரியார் பிறந்த இந்த மண்ணில் இந்த நகராட்சியை இன்னும் விரிவுபடுத்த வேண்டுமென்று அவர் விரும்பியதற்கேற்ப இதை மாநகராட்சியாக ஆக்கப்படும் முப்பெரும் விழா நடைபெறும் இந்த நல்ல நாளில் நான் அறிவிக்கின்றேன் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X