For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெருக்கடி முற்றுகிறது - அம்பிகா சோனி நீக்கப்படுவாரா?

By Staff
Google Oneindia Tamil News


டெல்லி:

ராமர் பாலம் தொடர்பான வழக்கில் மத்திய தொல்பொருள் துறை தாக்கல் செய்த சர்ச்சைக்குரிய அறிக்கை தொடர்பான விவகாரத்தில் சிக்கியுள்ள அம்பிகா சோனிக்கு காங்கிரஸ் கட்சிக்குள்ளும், பாஜகவிடமிருந்தும் நெருக்கடி வலுத்து வருவதால் அவரது பதவி பறிபோகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராமர் பால வழக்கு தொடர்பாக மத்திய கலாச்சாரத்துறையின் கீழ் வரும் மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், ராமர் இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை. ராமாயணத்தில் நடந்தவை உண்மையான சம்பவங்கள் அல்ல, அதற்கு ஆதாரங்களும் இல்லை என்று கூறப்பட்டிருந்தது.

இது பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டது. பாஜக தலைவர் அத்வானி பிரதமர் மன்மோகன் சிங்கை நேரிலேயே சந்தித்து தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக பிரதமரும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்தது.

இந்து அமைப்புகளும் இதை பெரிய பிரச்சினையாக்க தீர்மானித்தன. நிலைமை மோசமாவதை உணர்ந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலையிட்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் திருத்தம் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய அறிக்கையைத் திரும்பப் பெற்றது மத்திய அரசு. இந்த நிலையில் இந்த அறிக்கையை பார்த்து ஓ.கே. செய்த கலாச்சாரத் துறை அமைச்சர் அம்பிகா சோனிக்கு தற்போது சிக்கல் முற்றி வருகிறது.

சோனியா காந்திக்கு மிகவும் நெருக்கமானவர் சோனி. சோனியா காந்தியின் நிழல் போல கூடவே இருப்பவர். இப்படிப்பட்ட சோனிக்கு பாஜகவினரிடமிருந்து மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் கூட எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. வர்த்தகத்துறை இணை அமைச்சர் ஜெயராம் ரமேஷ், சோனியை கடுமையாகக் கண்டித்துள்ளார். நானாக இருந்திருந்தால் உடனடியாக பதவியை ராஜினாமா செய்திருப்பேன் என்று அவர் கடுமையாக கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியினர் மத்தியிலும் சோனியின் செயல் அதிருப்தியைக் கிளப்பியுள்ளதாக தெரிகிறது. தேவையில்லாமல் பாஜகவினருக்கு மெல்ல அவல் கொடுத்து விட்டார் சோனி என்ற குற்றச்சாட்டு சோனி மீது எழுந்துள்ளது.

இந்த நிலையில் சோனி மீது நடவடிக்கை எடுப்பதா அல்லது கட்சிக் கட்டுப்பாட்டை மீறும் வகையில் சக அமைச்சரைக் கடுமையாக விமர்சித்த ஜெயராம் ரமேஷ் மீது நடவடிக்கை எடுப்பதா என்ற குழப்பத்தில் சோனியா காந்தி உள்ளதாக தெரிகிறது.

சோனி தனக்கு வேண்டியவர் என்றாலும் கூட, கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படுவதை அனுமதிக்க முடியாது என்ற ரீதியிலும் யோசிக்க வேண்டியிருப்பதால் சோனியின் பதவியைப் பறிக்க சோனியா காந்தி முடிவு செய்யக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதற்கேற்ப, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X