'ராமர்': மத்திய அரசு கூறியதை பொறுத்து கொள்ள முடியாது - மோடி
ராஜ்காட்:
ராமர் குறித்து மத்திய காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியதை பொறுத்துக் கொள்ளவே முடியாது. 100 கோடி இந்தியர்களும் இதனால் கோபமடைந்துள்ளனர் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம் ராஜ்காட்டில், நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், மத்திய அரசு ராமர் இல்லை என்று கூறி உச்சநீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்தது கண்டனத்துக்குரியது. இதை 100 கோடி இந்தியர்களும் ஏற்க மாட்டார்கள். குறிப்பாக குஜராத் மக்கள் ஏற்கவே மாட்டார்கள்.
குஜராத் அரசை விவசாயிகளுக்கு விரோதமான அரசு என்று காங்கிரஸ் கட்சி அவதூறாகக் கூறி வருகிறது. ஆனால் எனது அரசு விவசாயிகளுக்கு 18 ஆயிரம் கிராமங்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல், விவசாய உற்பத்தியைப் பெருக்கி அதிக லாபம் அடைவதற்கும் விவசாயிகளுக்கு எனது அரசு உதவுகிறது என்றார் மோடி.