மகள் வீட்டில் தாக்குதல்-கருத்து கூற கருணாநிதி மறுப்பு
சென்னை:
முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வியின் பெங்களூர் வீடு பெட்ரோல் குண்டு வீசித் தாக்கப்பட்டதற்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேசயம் முழுமையான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு முன் இதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில பொதுச் செயலாளர் தா.பாண்டியன், கி.வீரமணி உள்ளிட்டோர் செல்வி வீடு மீது நடந்த தாக்குதலைக் கண்டித்துள்ளனர்.
இதற்கிடையே, இந்த சம்பவம் நடந்தபோது சென்னையில் நடந்த காவியக் கலைஞர் என்ற ஒலி-ஒளிக் காட்சியைப் பார்த்துக் கொகாண்டிருந்தார் கருணாநிதி.
குண்டு வீச்சுச் சம்பவம் குறித்த தகவல் அப்போது தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு வந்தது. இருப்பினும் உடனடியாக தகவலை முதல்வரிடம் தெரிவிக்க வேண்டாம் என்று முடிவு செய்த காவல்துறை அதிகாரிகள் விழா முடியும் தருவாயில் முதல்வரிடம் இதைத் தெரிவித்தனர்.
இதையடுத்து முதல்வர் கருணாநிதி தனது வீட்டுக்கு விரைந்தார். அங்கு காத்திருந்த செய்தியாளர்களைப் பார்த்த அவர், முழு விவரம் கிடைக்கவில்லை. அதற்கு முன்பு கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறி விட்டு வீட்டுக்குள் சென்று விட்டார்.