நான்குநேரியில் 7 புதிய தொழில் மண்டலங்கள்!
சென்னை:
நான்குநேரியில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்த பல்நோக்கு சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்குப் பதில் புதிதாக 7 வெவ்வேரு தொழில் மண்டலங்களை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் கனவுத் திட்டம்தான் நான்குநேரி பல்நோக்கு சிறப்புப் பொருளாதார மண்டலம். ஆனால் இந்தத் திட்டம் இதுவரை நடைமுறைக்கு வரவே இல்லை.
இந்த நிலையில் நான்குநேரியில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்த பல்நோக்கு சிறப்பு பொருளாதார மண்டலத்திற்குப் பதில், வெவ்வேறு தொழில் சார்ந்த 7 தொழில் மண்டலங்களைக உருவாக்க தற்போது தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இவை அனைத்தும் நான்குநேரியிலேயே அமையும்.
616 ஹெக்டேர் நிலப்பரப்பில் இந்த தொழில் மண்டலங்கள் உருவாக்கப்படும். விரைவில் இவை நடைமுறைக்கு வரும் என அரசு அறிவித்துள்ளது.
இதில் 110 ஹெக்டேர் பரப்பளவில் ஆட்டோமொபைல் உதிரி பாக தயாரிப்பு தொழிற்சாலையும், 121 ஹெக்டேர் பரப்பளவில் பொறியியல் துறை நிறுவனம் ஒன்றும் வருகிறது.
107 ஹெக்டேரில் மின்சாரம் மற்றும் மின்னணு உதிரி பாக பிரிவு உருவாகிறது. 185 ஹெக்டேர் பரப்பளவில் மருந்துத் தயாரிப்புப் பிரிவு உருவாக்கப்படுகிறது.
பத்து ஹெக்டேரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், 13 ஹெக்டேரில் பயோடெக் தொழிற்சாலையும் வரவுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
முந்தைய திமுக ஆட்சியிந்போது, தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரத்னவேல் பாண்டியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுதான் நான்குநேரில் பல்நோக்கு சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அமைக்கலாம் என பரிந்துரைத்தது. இதையடுத்து நான்குநேரியில் நடந்த விழாவில் இதற்கு அடிக்கல்லும் நாட்டப்பட்டது.
ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் நான்குநேரித் திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டனர். தற்போது மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் நான்குநேரி சிறப்புப் ெபாருளாதார மண்டலத்தை மீண்டும் கையில் எடுத்தது. இருப்பினும் தற்போது பல்நோக்கு சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்குப் பதில் 7 வகையான தொழில் மண்டலங்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.