சந்தன மரம் கடத்திய சகோதரர்கள் கைது
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சந்தன மரம் கடத்திய சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பல ஆயிரம் ஏக்கர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான நிலப்பரப்பில் விலை உயர்ந்த தேக்கு, சந்தனம், ஈட்டி உள்ளிட்ட மரங்கள் உள்ளன.
இம்மலை பகுதியில் களக்காடு உள்ளிட்ட சில பகுதிகளில் சந்தன மரங்கள் வெட்டப்படுவதாக வனத்துறைக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து அவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சிவப்புரத்தை சேர்ந்த தங்கபாண்டி, பாலகிருஷ்ணன் சகோதரர்கள் 10 கிலோ எடை கொண்ட சந்தன மரத்துண்டு கட்டையோடு வந்ததைப் பார்த்த வனத்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சந்தனமரம் கடத்தி பிடிபட்ட இருவரும் சகோதரர்களாம். தமிழக காட்டு பகுதியில் இருந்து சந்தன மரத்தின் வைரம் நிறைந்த பகுதிகளை வெட்டி எடுத்து கேரளாவுக்கு விற்பனை செய்வதாகவும், அங்கு நல்ல விலை கிடைப்பதும் குறித்து தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சந்தன மரக் கடத்தலில் கேரள கும்பலுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து பிடிபட்ட சகோதரர்களிடம் கேரள கும்பல் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. இப்பகுதியிலிருந்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தேக்கு மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளதாகவும், அதில் இவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனரா என்றும் விசாரணை நடந்து வருகிறது.