வேதாந்தி, அத்வானி கொடும்பாவி எரிப்பு: விடுதலைச் சிறுத்தைகள் போராட்டம்
சென்னை:
முதல்வர் கருணாநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள பாஜக முன்னாள் எம்.பியும், வி.எச்.பியைச் சேர்ந்தவருமான சாமியார் வேதாந்தி மற்றும் பாஜக தலைவர் அத்வானி ஆகியோரின் கொடும்பாவிகளை எரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட தொண்டர்கள், அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது அத்வானி, வேதாந்தி ஆகியோரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. உடனடியாக வேதாந்தி தனது பேச்சைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர்கள் கோஷமிட்டனர்.
அபபோது செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறுகையில், முதல்வர் கருணாநிதிக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டலால் கோடிக்கணக்கான தமிழர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர், கொதிப்படைந்துள்ளனர். இந்தப் பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது. வேதாந்தியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உ.பி. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.