நெல்லையில் போட்டி போட்டு கருணாநிதி-வேதாந்தி உருவ பொம்மைகள் எரிப்பு
திருநெல்வேலி:
திமுகவினரும் இந்து அமைப்பினரும் போட்டி போட்டுக் கொண்டு தலைவர்களின் உருவ பொம்மைகளை எரித்தனர்.
ராமர் பாலம் குறித்து முதல்வர் தெரிவித்த கருத்துக்கு பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் ஆட்சேபம் தெரிவித்திருந்தன.
விசுவ இந்து பரிஷத்தை சேர்ந்த முன்னாள் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ராம்விலாஸ் வேதாந்தி முதல்வரின் தலையையும், நாக்கையும் துண்டிப்போருக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும் என்று பத்வா வெளியிட்டதாவும் செய்தி வெளியானது.
இந்த பத்வா அறிவிப்பால் திமுகவினர் மத்தியில் கடும் கொத்தளிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் நெல்லை சந்தி பிள்ளையார் கோவில் பகுதியில் திமுகவினர் சுமார் 50 பேர் கூடினர். பா.ஜ மற்றும் வேதாந்திக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பின்னர் ஆட்டோவில் எடுத்து வந்திருந்த வேதாந்தியின் உருவ பொம்மையை எடுத்து நடுரோட்டில் போட்டு தீ வைத்தனர்.
திமுகவினர் கொடும்பாவி எரித்த 1 மணி நேரத்திற்குள் பாஜகவினர் சிலர் டவுன் சொக்கப்பானை அருகே கூடி முதல்வர் கருணாநிதி உருவ பொம்மையை எரித்தனர்.
இதற்கிடையே திமுக தொண்டர்கள் ராம் விலாஸ் வேதாந்தியின் உருவ பொம்மையை மாலைராஜா எம்.எல்.ஏ தலைமையில் நடுரோட்டில் போட்டு தீ வைத்தனர். அவரது உருவ பொம்மையை செருப்பால் அடித்தனர்.
மேலும் வள்ளியூர், அம்பை, பாவூர்சத்திரம், செங்கோட்டை சங்கரன்கோவில் என மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் திமுகவினர் வேதாந்தியின் உருவ பொம்மையை எரித்தனர்.