தொழிலதிபர்கள், டாக்டர்களுக்கு உழவர் பாதுகாப்பு அட்டைகள் - செங்கோட்டையில் கூத்து!
செங்கோட்டை:
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில், பெரும் தொழிலதிபர்கள், வங்கி அதிகாரிகள், டாக்டர்கள் உள்பட சமூகத்தில் நல்ல அந்தஸ்து உள்ளவர்களுக்கு உழவர் பாதுகாப்பு அட்டை வழங்கப்படுவதால் சிறு விவசாயிகள், மற்றும் விவசாய தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக அரசு செயல்படுத்தி வரும் விவசாய தொழிலாளர்கள்-விவசாயிகள், சமூக பாதுகாப்பு மற்றும் நலத்திட்டம் கிராமப்பகுதிகளில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
18 வயது முதல் 65 வயது வரை உள்ள சிறு விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு பயன்தரும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் இத்திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படுவதால் கிராம பகுதிகளில் இத்திட்டம் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தில் திருமண உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, விபத்து மற்றும் இயற்கை மரணமடைந்தால் அவர்களின் குடும்பத்திற்கு உதவித் தொகை உள்பட பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.
இத்திட்டம் நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் தேதி செயல்படத் தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டத்தில் 3 லட்சத்து 33 ஆயிரத்து 892 குடும்பங்கள் பயனாளியாக கண்டறியப்பட்டன.
இதில் 2 லட்சத்து 53 ஆயிரத்து 357 குடுபத்திற்கு எல்காட் நிறுவனத்திலிருந்து அடையாள அட்டை வந்துள்ளது. இத்திட்டம் செயல்பட தொடங்கியவுடன் நெல்லை மாவட்டத்தில் முதல் கட்டமாக 80 பேருக்கு 5.73 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.
தொடர்ந்து 250 பேருக்கு ரூ. 16.22 லட்சம் வழங்கப்பட்டது. உழவர் அடையாள அட்டையை விநியோகிக்கும் பணி தற்போது நடந்து வரும் நிலையில் தொழிலதிபர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் அடையாள அட்டை வந்துள்ளதால் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள தகுதியான விவசாய கூலி தொழிலாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
செங்கோட்டை நகராட்சியை பொறுத்தவரை ஒவ்வொரு வார்டிற்கும் சம்பந்தப்பட்ட வார்டு கவுன்சிலர் மூலம் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தகுதியான பெரும்பாலானோருக்கு அடையாள அட்டை வராததால் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. செங்கோட்டையில் தென்மாவட்டங்களில் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான பிரிமியர் ராமன் என்பவருக்கு உழவர் பாதுகாப்பு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் செங்கோட்டையை சார்ந்த வங்கி அதிகாரி ஜானகி ராம் என்பவருக்கும், டாக்டர் சந்திரசேகர் என்பவருக்கும் உழவர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
தகுதியான பலருக்கு அடையாள அட்டை கிடைக்காத நிலையில் சமூகத்தில் அந்தஸ்த்து உள்ள பலருக்கு அடையாள அட்டை வழங்கி வருவது விவசாயிகளுக்கும், விவசாய கூலி தொழிலாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் அடையாள அட்டை பெற்ற பலர் தாங்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மனுவே செய்யவில்லை என கூறுகின்றனர்.
வருவாய்துறையினரின் அலட்சிய செயல்பாட்டால் செங்கோட்டை பகுதியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே அடையாள அட்டை விநியோகத்தை நிறுத்தி தகுதியான அனைவருக்கும் அடையாள அட்டை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் விரும்புகின்றனர்.
அது போல இத்திட்டத்தை கேலி கூத்தாக்கும் வகையில் பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பு நடத்திய அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் விரும்புகின்றனர்.