For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டிடிஎச் தொழில்நுட்பத்தை யாராலும் தடுக்க முடியாது-டி.ஆர்

By Staff
Google Oneindia Tamil News


சென்னை:

வீடுகளுக்கு நேரடியாக தொலைக்காட்சி ஒளிபரப்பை வழங்கக்கூடிய டிடிஎச் தொழில்நுட்பத்தை யாராலும் தடுக்க முடியாது என்று லட்சிய திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

நிருபர்களிடம் அவர் கூறியதாவது,

கேபிள் மூலமாகத்தான் எல்லா தமிழ் செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பும் வீடுகளுக்கு செல்கிறது. விஞ்ஞான வளர்ச்சியால் இப்போது டிடிஎச் வந்துள்ளது. இதனால், தங்கள் தொழில் பாதிப்பதாகக் கூறி, கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தங்கள் ஆதங்கத்தை, கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்.

முன்பெல்லாம், சிடி, விசிடி வந்தபோது சின்னத்திரை, பெரிய திரையினர் பாதிக்கப்பட்டனர். போராடத்தான் செய்வார்கள். இந்தப் பிரச்சனையைப் பேசி தீர்க்க வேண்டும். விரைவில் இதில் சமாதானம் ஏற்படும் என்று நம்புகிறேன்.

பாஜகவினருக்கு கண்டனம்:

முதல்வர் கருணாநிதியின் தலையையும், நாக்கையும் துண்டிக்க வேண்டும் என்று விஎச்பியைச் சேர்ந்த ராம்விலாஸ் வேதாந்தி பேசியிருக்கிறார். கொலை வெறியைத் தூண்டும் அவரின் பேச்சை லட்சிய திமுக மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது.

5வது முறையாக தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் ஒரு தலைவரைப் பற்றி இப்படி சொல்வது, இந்திய ஜனநாயகத்துக்கே விடப்பட்ட சவாலாகும்.

பாஜகவினர், அவர்களின் ஆட்சிக்காலம் வரை ராமர் பாலம் பற்றி பேசாதது ஏன். பாஜக ஆட்சி நடந்தால் மட்டும் அமைதியாக இருக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் என்றால் மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே ஏன்.

ராமர் கோவில் பிரச்சனையைப் பற்றியும் முன்பு பெரிதாக பேசினார்கள். அவர்கள் இந்து மதத்தினருக்கு ஒட்டுமொத்த பிரதிநிதி இல்லை.

சேதுக் கால்வாய்த் திட்டத்தில் பின்னடைவு ஏற்படுத்துவதற்காக ஏதோ சதி நடக்கிறது.

நானும் ஒரு ஆஞ்சநேய பக்தன்தான். நான் இந்தப் பிரச்சனை பற்றி முதல்வரிடம் நேரில் பேசினேன். ராமர் என்ற பெயரில் ஒரு பொறியாளர் அந்தப் பாலத்தைக் கட்டியதாகத் தெரியவில்லை என்றுதான் அவர் கூறியுள்ளார்.

இந்து மதத்தைப் புண்படுத்துவது தனது நோக்கமல்ல என்று அவர் தெளிவாகக் கூறிய பின்பும், அவரைச் சீண்டி வம்புக்கு இழுப்பது வேதனைக்குரியதாகும்.

பகுத்தறிவுக் கொள்கையைப் பேசக்கூடாது என்று முதல்வர் கருணாநிதியை எவரும் கட்டாயப்படுத்த முடியாது. பெரியார் காலத்தில் இல்லாத எதிர்வாதமா. பகுத்தறிவாளர்கள் ராமர் குறித்து வாதிக்கலாம். அதற்கு ஆன்மீகவாதிகள் எதிர்வாதம் செய்யலாம். அதை விட்டுவிட்டு பகுத்தறிவாளர்கள் வாதமே செய்யக்கூடாது என்பது எந்த வகையில் நியாயம்.

வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய வேதாந்தி மீது, உத்தரப்பிரதேச மாநில அரசும், மத்திய அரசும் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய வேண்டும். இதற்காக விரைவில் லதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X