பாஜக அலுவலகம் மீது தாக்குதல்: வைகோ, திருநாவுக்கரசர் கண்டனம்
சென்னை:
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியதற்கு முதல்வர் கருணாநிதியே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் பாஜக எம்.பி திருநாவுக்கரசர் ஆகியோர் கூறியுள்ளனர்.
சென்னையில் திமுகவினரால் தாக்குதலுக்கு ஆளான பாஜக அலுவலகத்தை நேற்று இரவு வைகோ நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வி.எச்.பி. பிரமுகர் வேதாந்தி பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது, ஏற்புடையது அல்ல.
ஆனால் அதற்கு ஒரு கட்சியின் தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. முதல்வர் கருணாநிதியின் ஆலோசனையின்பேரில்தான், அவர் திட்டமிட்டுக் கொடுததே இந்தத் தாக்குதல் நடந்ததாக நான் குற்றம் சாட்டுகிறேன். இதற்கு கருணாநிதிதான் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
முன்னதாக வைகோ வெளியிட்ட அறிக்கையில், குறிப்பிட்ட வதத்தினரைப் பற்றி புண்படுத்தும் வகையில் முதல்வர் கருணாநிதி பேசியது வம்பை விலை கொடுத்து வாங்கியதாகும்.
அதேபால வட நாட்டைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. வேதாந்தி தமிழக முதல்வர் தலைக்கு விலை வைத்து அறிக்கை விட்டது கடும் கண்டனத்துக்குரியதாகும்.வேதாந்தியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க விரும்பினால் அறவழியில் ஒரு இடத்தில் ஆர்ப்பாட்டம் செய்திருக்கலாம்.
ஆனால் பாஜக அலுவலகத்திற்கு முன்பு மறியல் என அமைச்சர் அறிக்கை விட்டதும், ஆயிரக்கணக்கானோர் உருட்டுக் கட்டைகளோடும், கற்களோடும் சென்று தாக்குதல் நடத்தியதும், முன்கூட்டியே திட்டமிட்ட அராஜகச் செயலாகும்.
இதற்கு கருணாநிதிதான் முழுப் பொறுப்பேற்க வேண்டும். வன்முறை வெறியாட்டத்துக்குக் காரணமான அமைச்சர்கள், சென்னை மேயர் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேதாந்தி என்பவரின் தரம் கெட்ட வன்முறை பேச்சை பாஜக சார்பிலும், என் சார்பிலும் கடுமையாக கண்டிக்கிறேன்.
திமுக சார்பில் இந்தத் தவறான பேச்சை கண்டிக்க உரிமை உண்டு. ஆனால் கட்சியில் உள்ள திமுக போலீஸாரை பார்வையாளராக வைத்துக் கொண்டு தமிழ பாஜக அலுவலகத்திற்கு சென்று கல் வீசியும், செருப்பு வீசியும், அலுவலக கட்டடத்தை உடைத்தும், உள்ளிருந்த பாஜகவினரை தாக்க முயற்சித்தும் நடத்தியிருக்கிற சம்பவம் மிகுந்த கண்டனத்துக்குரியது, அநாகரீகமானது.
மாநில பாஜக துணைத் தலைவர் ராஜா வீடும், அவரது மாமியார் வீடும் காரைக்குடியில், தாக்கப்பட்டு வீட்டுக்கு முன்பு நின்றிருந்த வாகனங்களும் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் கண்டனத்துக்குரிய செயலாகும்.
ஜனநாயக நாட்டில் கருத்துக்களும், எதிர் கருத்துக்களும், அதையொட்டிய போராட்டங்களும் ஜனநாயக முறையில் அமைய வேண்டுமே தவிர தனியார் வீடுளிலும், கட்சி அலுவலகங்களிலும் வன்முறையை ஏவி விடுவதும், அதை போலீஸாரும், அரசும் வேடிக்கை பார்ப்பதும் திமுகவினருக்கு அகில இந்திய அளவில் கெட்ட பெயரையே ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார் அவர்.