பாபர் மசூதி இடிப்பு வழக்கு: விடுவிக்கக் கோரிய வேதாந்தி மனு தள்ளுபடி
ரேபரேலி:
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தங்களைக் குற்றம் சாட்டியிருப்பதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரி முதல்வர் கருணாநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்த வி.எச்.பி. சாமியார் வேதாந்தி தாக்கல் செய்த மனுவை சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சமீபத்தில், முதல்வர் கருணாநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்து பெரும் சர்ச்சைக்கு ஆளான முன்னாள் பாஜக எம்.பியும், வி.எச்.பி. பிரமுகருமான ராம் விலாஸ் வேதாந்தி, பாபர் மசூதி வழக்கிலும் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக சேர்க்கப்பட்டுள்ளார்.
ரேபரேலி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தன் மீது குற்றம் சாட்டியிருப்பதிலிருந்து விடுவிக்க வேண்டும், வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரி சாமியார்களான வேதாந்தி, மஹந்த் தர்மதாஸ், ஜெகதீஷ் முனி, டாக்டர் சதீஷ் நகர், பைகுந்த் லால் சர்மா, சம்பத் ராஜ் ஆகியோர் மனு செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வன்ஸ்ராஜ், அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்தார். இவர்களுக்கு எதிரான அனைத்து ஆதராரங்களையும் தாக்கல் செய்யுமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டார். வழக்கு விசாரணை அக்டோபர் 16ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.