சேது திட்டத்தை எதிர்க்கவில்லை: பாதையை மாற்றவே கோருகிறோம்-பாஜக
டெல்லி:
சேது சமுத்திரத் திட்டத்தின் பாதையை மாற்றத்தான் பாஜக கோரி வருகிறது. மாறாக சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றவே கூடாது என நாங்கள் ஒருபோதும் கூறவில்லை என்று பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ராமர் பாலத்தின் பாதுகாப்பு குறித்துத்தான் பாஜக கவலைப்படுகிறது. ராமர் பாலத்திற்கு சேதம் ஏற்படாத வகையில் மாற்றுப் பாதையில் கால்வாய் அமைக்கவே நாங்கள் கோரி வருகிறோம். மற்றபடி சேது சமுத்திரத் திட்டத்மே கூடாது என்று நாங்கள் கூறவில்லை.
இந்தத் திட்டத்தை நாங்கள் ஏன் எதிர்க்க வேண்டும். இதை யாருமே எதிர்க்க மாட்டார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணிக் கட்சிகளும் எங்ளுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது எங்களை வருத்தமடையச் செய்கிறது.
அக்டோபர் 1ம் தேதி திமுக பந்த் அறிவித்துள்ளது நீதித்துறையை அவமதிக்கும் செயல். நீதித்துறையை குறைத்து மதிப்பிடும் செயலாகும். இது சட்டவிரோதமான பந்த். ஒரு கட்சி ஆளுங்கட்சியாக இருக்கும்போது அதுவே பந்த் நடத்த அழைப்பு விடுப்பது சட்டவிரோதமாகும். மேலும் தற்போது ராமர் பால பிரச்சினை உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது. எனவே இந்த பந்த் முழுக்க முழுக்க நீதித்துறைக்கே எதிரானது.
தமிழகத்தில் தொடர்ந்து பாஜக அலுவலகங்கள் தாக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து விவாதிக்க தலைவர்கள் கூட்டத்தை ராஜ்நாத் சிங் கூட்டியுள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அதில் விவாதிப்போம் என்றார்.
இதற்கிடையே, தமிழகத்தில் பாஜக அலுவலகங்கள் தாக்கப்படுவது குறித்து குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை சந்தித்து புகார் மனு தர பாஜக முடிவு செய்துள்ளது.