எஸ்எஸ்எல்சி, பிளஸ் டூ கட்டணம் ரத்து
சென்னை:
பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொது தேர்வு கட்டணம் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மாநில கல்வித் திட்டத்தின் கீழ் 10,12ம் வகுப்புகள் பயிலும் அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் இது பொருந்தும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளிலும், உதவி பெறாத பள்ளிகளிலும் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இந்த சலுகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 10ம் வகுப்பு தேர்வுக் கட்டணமாக ரூ. 115ம், பிளஸ் டூ தேர்வுக் கட்டணமாக ரூ.175ம் வசூலிக்கப்பட்டு வந்தது.
செய்முறை தேர்வுடன் கூடிய பாடங்கள் படிக்கும் பிளஸ் டூ மாணவர்களிடம் ரூ.205 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.
இப்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டண ரத்து மூலம் சுமார் 6 லட்சம் எஸ்எஸ்எல்சி மாணவர்களும், 5.5 லட்சம் பிளஸ் டூ மாணவர்களும் பலனடையவுள்ளனர்.
இந்த கட்டண ரத்தால் அரசுக்கு சுமார் ரூ.16 கோடி இழப்பு ஏற்படும். ஆனாலும் இந்தச் சலுகை மூலம் மேலும் பல மாணவர்கள் தமிழ் வழிக் கல்வியை நாடுவார்கள் என்பதால் இத் திட்டம் அமலாக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.