கருணாநிதியை சந்தித்தார் திணேஷ் கார்த்திக் பரிசு கொடுத்து முதல்வர் பாராட்டு
சென்னை:
முதல்வர் கருணாநிதியை இந்திய கிரிக்கெட் வீரர் திணேஷ் கார்த்திக் இன்று சந்தித்து ஆசி பெற்றார். அவருக்கு உலகக் கோப்பையை வென்றதைப் பாராட்டி ரூ. 5 லட்சம் பரிசு கொடுத்து முதல்வர் கருணாநிதி வாழ்த்தினார்.
தென் ஆப்பிரிக்காவில் நடந்த 20-20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் வென்ற இந்திய அணி வீரர்களுக்குக் கோடிக்கணக்கில் பரிசுகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்திய கிரிக்கெட் வாரியம் தவிர, வீரர்கள் சார்ந்த மாநில அரசுகள், அவர்கள் வேலை பார்த்து நிறுவனங்கள், இந்திய அணியின் ஸ்பான்சரான சஹாரா நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் பரிசுகள் கொட்டிக் குவிக்கப்பட்டுள்ளன.
இந்திய அணியில் இடம் பெற்றுள்ள திணேஷ் கார்த்திக்குக்கு தமிழக அரசு ரூ. 5 லட்சம் பரிசுத் தொகையை அறிவித்திருந்தது. நேற்று சென்னை வந்த திணேஷ் கார்த்திக், இன்று கோபாலபுரம் சென்று முதல்வர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார்.
அவரிடம் ரூ. 5 லட்சம் பரிசுத் தொகைக்கான காசோலையை வழங்கிய முதல்வர் திணேஷின் சிறப்பான ஆட்டம் தொடர வாழ்த்தினார்.
நிகழ்ச்சியின்போது மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, விளையாட்டுத் துறை அமைச்சர் மைதீன் கான், மத்திய அமைச்சர் ராசா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பரிசைப் பெற்றுக் கொண்டு வெளியே வந்த திணேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக அரசு வழங்கியுள்ள இந்தப் பரிசு ஊக்கம் தருவதாக உள்ளது. விளையாட்டுக்குக் குறிப்பாக கிரிக்கெட்டுக்கு தமிழக அரசு தரும் ஆதரவு பாராட்டுக்குரியது.
இந்தப் பரிசின் மூலம், அடுத்த நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாட புத்துணர்வு கிடைத்துள்ளது என்றார்.