'சேது'வால் சுற்றுச்சூழல் பாதிக்கும்: நிபுணர் குழு
சென்னை:
சேது சமுத்திரத் திட்டம் முறையான ஆய்வுகள் இல்லாமல் அவசரம் அவசரமாக நிறைவேற்றப்பட்டால், சுற்றுச்சூழலுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும் என நிபுணர் குழு ஒன்று தெரிவித்துள்ளது.
இந்திய மண்ணியல் ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் கே.கோபாலகிருஷ்ணன் தலைமையிலான நிபுணர் குழு இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தத் திட்டத்தை நிறைவேற்றினால், சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்படும். கடலில் உள்ள இயற்கை வளம் பாதிக்கப்படும்.
இந்த திட்டம் தொடர்பாக இந்திய மண்ணியல் நிறுவனத்தை யாருமே ஆலோசனை கேட்கவில்லை. இதுபோன்ற திட்டங்களில் கண்டிப்பாக மண்ணியல் நிறுவனத்திடம் கருத்து கேட்டிருக்க வேண்டும்.
இயற்கையாக உள்ள சில அமைப்புகளை சேதப்படுத்தினாலோ அல்லது பாதிப்பை ஏற்படுத்தினாலோ, சுனாமி, சூறாவளி போன்ற இயற்கைச் சீற்றங்களால் தென் மாநில கடலோரப் பகுதிகள் பெரும் பாதிப்பை சந்திக்கக் கூடும்.
எனவே இந்தத் திட்டத்தின் சாதக, பாதகங்கள் குறித்து உடனடியாக பல்துறை நிபுணர்களைக் கொண்ட குழுவை அமைத்து விரிவாக ஆய்வு நடத்தப்பட வேண்டும்.
சேதுக் கால்வாய் மூலம் தற்போதுள்ள கொல்கத்தா - தூத்துக்குடி இடையிலான கடல் பயண நேரம், ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள் மட்டுமே குறையும். எனவே இதை குறைந்த தூரத்திலான பயணத்திற்கு உதவும் கால்வாய் என்று கூற முடியாது. மேலும், எரிபொருளும் அதிக அளவில் செலவாகும். எனவே இந்தத் திட்டத்தால் எந்தப் பலனும் இல்லை என்றார் அவர்.