வேதாந்தி மீது வால்பாறையில் வழக்கு பதிவு!
வால்பாறை:
முதல்வர் கருணாநிதியை அவதூறாக பேசிய முன்னாள் பாஜக எம்பி வேதாந்தி மீது வால்பாறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி தலையையும், நாக்கையும் வெட்டி எடுத்து வருபவர்களுக்கு தங்கம் பரிசு வழங்கப்படும் என பாஜகவின் முன்னாள் எம்பியும் விஎச்பியை சேர்ந்தவரான ராம்விலாஸ் வேதாந்தி என்பவர் கூறியிருந்தார்.
இதற்கு தமிழகம் முழுவதிலிருந்தும் அனைத்து கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்ததோடு வேதாந்தி கொடும்பாவியையும் எரித்தது. பாஜக அலுவலகத்தையும் திமுகவினர் தாக்கினர்.
வேதாந்தி கூறியது சட்ட விரோத செயல். அவர் தேவையில்லாமல் வன்முறையை தூண்டி விடுகிறார். இதனால் தமிழகத்தில் தேவையற்ற பதட்டம் உருவாகியுள்ளது.
எனவே பாஜகவின் முன்னாள் எம்பியும் விஎச்பியை சேர்ந்தவருமான வேதாந்தி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் திமுக எம்எல்ஏ இளவழகன் வால்பாறை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் வால்பாறை காவல் நிலைய ஆய்வாளர் ராமகிருஷ்ணன் பாஜகவின் முன்னாள் எம்பியும் விஷ்வ ஹிந்து பரிஷத் மண்டல் தலைவருமான வேதாந்தி மீது வழக்குபதிவு செய்தார்.