30 வருடங்களுக்கு பின் தேவர் ஜெயந்தியில் கருணாநிதி
கோவில்பட்டி:
பசும்பொன்னில் நடக்கவுள்ள தேவர் ஜெயந்தி விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதி பங்கேற்கவுள்ளதாக அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாநில துணைப் பொதுச் செயலாளர் சேதுராமபாண்டியன் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில இளைஞரணி மாநாடு ராஜபாளையத்தில் வரும் 7ம் தேதி நடக்கிறது. மாநாட்டை முன்னிட்டு அன்று மாலை 5 மணிக்கு தேவர் 100வது ஜெயந்தி விழா நினைவு ஊர்வலம் நடக்கிறது.
இதையடுத்து ஜவகர் மைதானத்தில் நடக்கும் மாநாட்டில் மாநிலத் தலைவர் நடிகர் கார்த்திக், அகில இந்திய பொதுச்செயலாளர் பிஸ்வாஸ் எம்.பி மற்றும் மேற்குவங்க துணை சபாநாயகர் பக்திபாதகோஸ் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.
அக்டோபர் 30ம் தேதி தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் 3 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொள்கிறார். மேலும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, பாஜக மூத்தத் தலைவர் அத்வானி உட்பட பல தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம்.
30 ஆண்டுகளுக்கு பிறகு தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க பசும்பொன் வரும் முதல்வரிடம், மதுரை விமானநிலையத்திற்கு முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்டவும், மதுரை அல்லது சென்னையில் தேவருக்கு மணிமண்டபம் கட்டவும் அவரிடம் பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் வலியுறுத்துவோம் என்றார் சேதுராம பாண்டியன்.