சோனியாவின் பெயரில் 'காந்தியா'?- கூடவே கூடாது: பாஜக
டெல்லி:
மகாத்மா காந்தியால் நேசிக்கப்பட்ட ராமர் மீது சோனியா காந்திக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் தனது பெயரிலிருந்து காந்தி என்ற பெயரை சோனியா காந்தி நீக்கி விட வேண்டும் என பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ராமர் பிரானை மகாத்மா காந்தி மிகவும் நேசித்தார், வழிபட்டார், ராமரையே நினைத்திருந்தார். மரணத் தருவாயில் கூட அவர் கடைசியாக உச்சரித்தது ராமர் பெயரைத்தான்.
ராமர் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கூறுமானால், காந்தியின் கொள்கைகள், போதனைகளையும் பொய் என்றுதான் அவர்கள் சொல்வதாக அர்த்தமாகும்.
சோனியா காந்தியின் பெயரில் காந்தி உள்ளது. அவருடைய குழந்தைகள் பெயரிலும் காந்தி உள்ளது. ராமர் இல்லை என்ற கருத்தில் சோனியா உறுதியாக இருந்தால் தங்களது குடும்பத்தினரின் பெயர்களிலிருந்து காந்தியை அவர்கள் நீக்கி விட வேண்டும்.
ராமர் இல்லை என்று காங்கிரஸ் கூறுமானால், காந்தியடிகள் போதித்த ராமராஜ்யம் என்ற கொள்கையும் பொய்யாகி விடும். இதற்கு காங்கிரஸ் என்ன பதில் சொல்லப் போகிறது.
மகாத்மா காந்தியின் அரசியல் தொலைநோக்குப் பார்வையாக ராம ராஜ்யம் இருந்தது. அவருடைய கடவுள் நம்பிக்கைப் பார்வையாக ரகுபதி ராகவ ராஜாராம் இருந்தது. அவருடைய கடைசி வார்த்தைகளும் கூட ஹே ராம் என்றுதான் இருந்தது.
முகலாய மன்னர்களும், ஆங்கிலேய ஆட்சியாளர்களும் கூட ராமர் குறித்து கேள்வி எழுப்ப துணிந்ததில்லை. ஆனால் இந்த அரசு அதைச் செய்து கொண்டுள்ளது. இந்த அரசுக்கு ஆதரவாக உள்ள கட்சியின் (திமுக) தொடர் விமர்சனங்களுக்கு துணை புரிந்து கொண்டிருக்கிறது.
ஒளரங்கசீப் கூட இவ்வாறு நடந்து கொண்டதில்லை. ராபர்ட் கிளைவும் கூட ராமரை சந்தேகப்பட துணிந்ததில்லை என்றார் அவர்.