விஸ்வநாதன் ஆனந்துக்கு தமிழக அரசு ரூ. 25 லட்சம் பரிசு
சென்னை:
செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு ரூ. 25 லட்சம் பரிசு வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு
தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மெக்சிகோவில் நடைபெற்ற உலக சதுரங்க விளையாட்டுப் போட்டியில் இரண்டாவது முறையாக சாம்பியன்ஷிப் பட்டம் வென்று, தமிழகத்திற்கு பெருமை தேடித் தந்துள்ளார்.
மிகச்சிறந்த இந்த வெற்றியைப் பாராட்டியுள்ள தமிழக முதல்வர் கருணாநிதி, தமிழக அரசின் சார்பில் அவருக்கு ஊக்கத் தொகையாக ரூ. 25 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
38 வீரர்களுக்கு பரிசு:
இதற்கிடையே, 18வது மெல்போர்ன் காமன்வெல்த் போட்டிகள் மற்றும் 10வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்று சாதனை படைத்த அஞ்சு பாபி ஜார்ஜ் உள்ளிட்ட தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் கருணாநிதி இன்று ரொக்கப் பரிசு வழங்கிப் பாராட்டினார்.
மொத்தம் 38 பேருக்கு ரூ. 1.31 கோடி மதிப்பிலான பரிசுத் தொகையை முதல்வர் வழங்கினார்.