கன்னியாகுமரி காவல் நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் காவல் நிலையத்தில் வெடிபொருள் வெடித்த சம்பவத்தைத் தொடர்ந்து குமரி மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இரணியல் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ள வந்த நெல்லை சரக டி.ஐ.ஜி கண்ணப்பன், மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் நீண்ட காலமாக கிடக்கும் பொருட்களை, பார்சல்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.
அதன்படி இந்த பணிகளை உடனடியாக தொடங்க எஸ்.பி சந்தோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள 33 போலீஸ் நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்த உள்ளனர்.
குறிப்பாக கடலோர பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் இந்த சோதனை நடக்க இருக்கிறது.
மண்டைக்காடு, குளச்சல், கன்னியாகுமரி, களியக்காவிளை, தக்கலை, புதுக்கடை, கீரிப்பாறை, பேச்சிபாறை, அருமனை, ஆறுக்காணி, நித்திரவிளை, கருங்கல், மணவாளங்குறிச்சி, வெள்ளிச்சந்தை, ராஜாக்கமங்கலம் உள்ளிட்ட கடலோர, மலையோர பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் இந்த சோதனைகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.