சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது - கூறுகிறார் திண்டிவனம் ராமமூர்த்தி
திருச்சி:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் திண்டிவனம் ராமமூர்த்தி. கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு கட்சிக்குள் புயலைக் கிளப்பி தனிக் கட்சி கண்டார். ஆனால் அவர் அதிகம் நம்பியிருந்த ஜெயலலிதா கைவிட்டு விட்டதால் சத்தம் இழந்து போனார் திண்டிவனம் ராமமூர்த்தி.
சமீபத்தில் தனது கட்சியை சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார் திண்டிவனம். அக்கட்சியின் தமிழக தலைவராக இருக்கிறார்.
திருச்சி வந்த திண்டிவனம் ராமமூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் நாளுக்கு நாள் சமூக விரோத செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. வன்முறையும் அதிகரித்து விட்டது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவு தபால் தலை மற்றும் நாணயங்களை வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ராஜா ஆகியோரை, சரத்பவார் கேட்டுக் கொண்டுள்ளார்.
வருகிற 30ம் தேதி நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் சரத்பவார் உள்ளிட்ட கட்சியின் தேசியத் தலைவர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
தமிழகத்தில் வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துவதில் திமுக அரசு தோல்வி அடைந்து விட்டது என்றார் ராமமூர்த்தி.