உயர்நீதிமன்றத்தின் பெயரில் பொய் தந்தி விசாரணைக்கு மதுரை பெஞ்ச் உத்தரவு
மதுரை:
மதுரை உயர்நீதிமன்றத்தின் பெயரில் பொய்யான தந்தியை அனுப்பிய நபரைக் கண்டுபிடிக்க மதுரை உயர்நீதிமன்றக் கிளை, மாநகர காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.
திருச்சி தொட்டியம் தாலுகா ஸ்ரீராமசமுத்திரத்தை சேர்ந்த பிரபாகரனுக்கு சொந்தமான குடோனில் பறிமுதல் செய்யப்பட்ட 14 ஆயிரத்து 700 யூனிட் மணலை விற்க இடைக் கால தடை கோரி உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.சந்துரு இடைக்கால தடை விதிக்க மறுத்து அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
ஆனால் அதே நாளில் முசிறி ஆர்டிஓவுக்கு உயர்நீதிமன்ற கிளை, அரசு வக்கீல் அலுவலகத்திலிருந்து மணலை விற்க நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இருப்பதாக தந்தி அனுப்பப்பட்டது.
இது நீதிபதியின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அரசு வக்கீல் அலுவலக ஊழியர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், உயர்நீதிமன்ற கிளை உத்தரவை மாற்றி தந்தி கொடுத்த நபரை கண்டுபிடிக்க மதுரை போலீஸ் கமிஷனருக்கு நீதிபதி கே.சந்துரு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் இந்த விவகாரத்தில் திருப்திகரமாக விசாரணை நடைபெறவில்லை. இது ஒரு மிகவும் முக்கியமான வழக்கு. சுயநலனுக்காக அரசு வக்கீல் அலுவலகத்தை பயன்படுத்தி முசிறி ஆர்டிஓவுக்கு தவறான தந்தி அனுப்பியுள்ளனர்.
இது கடுமையான குற்றம். இது குறித்து விசாரிக்க வேண்டியது மிகவும் அவசியம். எனவே இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மதுரை போலீஸ் கமிஷனரிடம் நீதிமன்ற பதிவாளர் வழங்க வேண்டும். போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர் அந்தஸ்துள்ள அதிகாரியைக் கொண்டு வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும்.
விசாரணை குறித்து ஒவ்வொரு 15 நாளுக்கு ஒரு முறை அறிக்கை அளிக்க வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.