குமாரசாமிக்கு எதிராக ம.ஜனதாதள லிங்காயத் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி!
பெங்களூர்:
பாஜகவிடம் ஆட்சியை ஒப்படைக்க மறுத்த முதல்வர் குமாரசாமிக்கு எதிராக, மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த லிங்காயத் ஜாதி எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். முன்னாள் முதல்வர் ஜே.எச்.படேலின் மகன் மகிமா படேலின் தலைமையில் அவர்கள் அணி திரண்டுள்ளதால் குமாரசாமிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் இரண்டு முக்கிய ஜாதிகள்தான் பெரும்பான்மையாக உள்ளவை. ஒன்று லிங்காயத், இன்னொன்று ஒக்கலிகா. இந்த இரு ஜாதியினரும் எப்போதும் எதிரும் புதிருமாகவே இருப்பார்கள்.
குமாரசாமி ஒக்கலிகா பிரிவைச் சேர்ந்தவர். பாஜக தலைவரும், துணை முதல்வர் பதவியை வகித்தவருமான எடியூரப்பா, லிங்காயத் பிரிவைச் சேர்ந்தவர்.
மதச்சார்பற்ற ஜனதாதளத்தில் உள்ள லிங்காயத் பிரிவு எம்.எல்.ஏக்கள் எடியூரப்பாவுக்கு ஆதரவாக தற்போது திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவரும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜே.எச்.படேலின் மகன் மகிமா படேல் தலைமையில் ஒன்று திரண்டுள்ளனர்.
ஒப்பந்தப்படி எடியூரப்பாவிடம் முதல்வர் பதவியை ஒப்படைக்க குமாரசாமி மறுத்தது தவறு என்று இவர்கள் கூறியுள்ளனர்.
நேற்று மதச்சார்பற்ற ஜனதாதள சட்டசபைக் கட்சிக் கூட்டம் நடந்தது. அப்போது மகிமா படேல் தலைமையில் லிங்காயத் பிரிவு எம்.எல்.ஏக்கள் 12க்கும் மேற்பட்டோர் வெளிநடப்புச் செய்தனர். பின்னர் மகிமா படேல் வீட்டில் அனைவரும் கூட ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து மகிமா கூறுகையில் நான் கட்சிக்கு எதிராக செயல்படவில்லை. ஆனால் ஒப்பந்தப்படி கட்சி நடந்து கொண்டிருக்க வேண்டும். அப்படி நடக்காததை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.
லிங்காயத் பிரிவு எம்.எல்.ஏக்கள் திடீர் போர்க்கொடி உயர்த்தியுள்ளதால் கட்சி ஜாதி அடிப்படையில் உடையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் லிங்காயத் பிரிவு மதச்சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு தரக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.