பசியிலிருந்து தப்ப சிறையை நாடிய இளைஞர்!
பாலசோர் (ஒரிசா):
தந்தை தனது குடும்பத்தை நிராகரித்து விட்டு வேறு பெண்ணுடன் சேர்ந்து வாழ்வதால் தான் பட்டினி கிடப்பதைத் தவிர்க்க தன்னை சிறையில் அடைக்குமாறு கோரி சிறைக்கு வந்த வாலிபரை சிறை அதிகாரிகள் திருப்பி அனுப்பி வைத்தனர்.
ஒரிசா மாநிலம் பூரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜீவ் காந்தி பிரதான் (22). இவர் பாலசோர் சிறைச்சாலைக்கு வந்தார். சிறைக் காவலர்களிடம், எனது தந்தை எனது குடும்பத்தை விட்டுப் பிரிந்து விட்டார். வேறு பெண்ணுடன் வசிக்கப் போய் விட்டார். இதனால் நான் பட்டினியால் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே என்னைக் கைது செய்து சிறையில் அடையுங்கள். அப்போதுதான் நான் பட்டினி கிடைப்பதிலிருந்து தப்ப முடியும் என்று கூறி தன்னை சிறையில் அடைக்கும்படி வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் அதிகாரிகள் பட்டினியிலிருந்து தப்புவதற்காகவெல்லாம் சிறையில் அடைக்க முடியாது என்று கூறி திருப்பி அனுப்பினர். ஆனால் அங்கேயே நின்று கொண்டு அடம் பிடித்த பிரதான், ஒரு கட்டத்தில் நீங்கள் என்னை உள்ளே அனுமதிக்காவிட்டால், நான் சிறை சுவரில் ஏறி குதித்து விடுவேன் என்று மிரட்ட ஆரம்பித்தார்.
மேலும், குற்றம் செய்தால்தான் உள்ளே அனுமதிப்பார்கள் என்றால் ஏதாவது குற்றம் செய்து விட்டு இங்கே வர முயற்சிப்பேன் என்றும் கூறியுள்ளார். அவரை இப்படியெல்லாம் செய்யக் கூடாது என்று அறிவுரை கூறி சிறைக் காவலர்கள் பெரும் சிரமப்பட்டு அனுப்பி வைத்துள்ளனர்.
இருந்தாலும் பிரதான் சிறைக்குள் வருவதற்காக ஏதாவது செய்தாலும் செய்யக் கூடும் என்று சிறைக் காவலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அவர் குறித்து போலீஸாரிடம் தெரிவித்துள்ளதாகவும், அவர்கள் பிரதானைக் கண்காணிப்பார்கள் என்றும் ஜெயிலர் ராத் கூறியுள்ளார்.