ஆடிட்டரிடம் செக் மோசடி செய்த ஊழியர் கைது
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் ஆடிட்டரிடம் வேலை பார்த்தவர் காசோலை மோசடி செய்து போலீசில் பிடிபட்டார்.
நாகர்கோவில், நேசமணி நகரைச் சேர்ந்தவர் மரியரசல் ஆண்ட்ரூஸ். இவர் ஆடிட்டராக இருக்கிறார். இவரிடம் கடந்த 12 ஆண்டுகளாக மேற்கு ராமன்புதூரை சேர்ந்த ரோச்வினிஸ்டர் என்பவர் அலுவலக உதவியாளராக இருந்து வந்தார்.
இதனால் அவர் மீதுள்ள நம்பிக்கையில் ஆடிட்டர் மரியரசல் ஆண்ட்ரூஸ் தனக்கு வரும் செக், மற்றும் பண வரவுகளை வாங்கவும், அவற்றை வங்கியில் செலுத்தவும் ரோச்வினிஸ்டரை அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 29ம் தேதி சுரேந்திரன் என்பவர் தொழில் சம்பந்தமாக ஆடிட்டரின் பெயரில் ரூ. 1 லட்சத்து 73 ஆயிரத்துக்கு ஒரு செக் கொடுத்தார். அதை வாங்கிய ஆடிட்டர், தனது வங்கிக்கணக்கில் போட்டு வருமாறு ரோச்வினிஸ்டரிடம் கூறினார்.
ஆனால் அதை வாங்கிய அவர் ஆடிட்டரை போல கையெழுத்து போட்டு அந்த பணத்தை எடுத்து கொண்டார்.
இதனை அறிந்த ஆடிட்டர் போலி கையெழுத்து போட்டு தன்னிடம் செக் மோசடி செய்துவிட்டதாக கூறி ரோச்வினிடர் மீது எஸ்.பி சந்தோஷ்குமாரிடம் புகார் செய்தார்.
எஸ்.பி உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ரோச்வினிஸ்டரை கைது செய்து நாகர்கோவில் 1வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.