கணவரைக் கொன்ற பெண் போலீஸ் கள்ளக் காதலனுடன் தற்கொலை
குற்றாலம்:
கணவனை கொலை செய்துவிட்டு கள்ளக் காதலனான தனது வீட்டு டிரைவருடன் தப்பியோடிய பெண் காதனுடன் தற்கொலை செய்து கொண்டார்.
குற்றாலம் வைரம் நகரில் உள்ள லாட்ஜில் நேற்று காலை கணவன்-மனைவி என்ற பெயரில் ஒரு தம்பதி அறை எடுத்தது. அவர்கள் தங்கியிருந்த கதவு இரவு 11 மணி வரை திறக்கப்படாததால் ஜன்னல் கதவை விடுதி ஊழியர்கள் திறந்து பார்த்தனர்.
அப்போது அந்த ஆணும் பெண்ணும் மின் விசிறியில் தூக்கு மாட்டிக் கொண்டு பிணமாக தொங்கிக் கொண்டிருந்தனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் வந்து விசாரணை நடத்தியதில் தற்கொலை செய்து கொண்டது திண்டிவனத்தைச் சேர்ந்த கள்ளக் காதல் ஜோடி தாமோதரன் என்ற சண்முகநாதன் (32) மற்றும் வைதேகி (35) என தெரியவந்தது.
இந்த வைதேகி பெண் போலீஸாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் திண்டிவனத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரான வழக்கறிஞர் நடராஜன் என்பவரது மனைவி ஆவார். இருவரும் காதல் திருமணம் முடித்தவர்கள். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந் நிலையில் தான் தனது வீட்டு கார் டிரைவரான தாமோதரனுடன் வைதேகிக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இந்தக் கள்ளக் காதலை நடராஜன் கண்டித்ததால் கணவன், மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டது. இந் நிலையில் போலீஸ் வேலையை வைதேகி ராஜினாமா செய்துள்ளார். தாமோதரனும் வேலையை விட்டு நீக்கப்பட்டார்.
ஆனாலும் நடராஜன் வெளியே சென்றுவிடும்போதெல்லாம் தாமோதரன் வைதேகி வீட்டுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார்.
இதை அறிந்த நடராஜன் வைதேகியை கண்டிக்கவே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இந் நிலையில் கடந்த 3ம் தேதி நடராஜன் தனது படுக்கை அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த ஆரம்பித்தனர். இதையடுத்து வைதேகியும், தாமோதரனும் தலைமறைவாயினர். இதனால் நடராஜனை மனைவியும் கள்ளக் காதலனும் தான் கொலை செய்திருக்க வேண்டும் எனக் கருதிய போலீசார் அவர்களைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில் தான் இந்த கள்ளக் காதல் ஜோடி ஒவ்வொரு ஊராக சுற்றிவிட்டு கடைசியாக குற்றாலத்துக்கு வந்து லாட்ஜில் தங்கியுள்ளனர். எப்படியும் போலீசாரிடம் பிடிபட்டு விடுவோம் என்ற அச்சத்தில் இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இவர்கள் தூக்கு போட்டுக் கொண்ட அறையில் இருந்து வைதேகி எழுதிய கடிதம் ஒன்றும் கிடைத்துள்ளது. அதில், எங்கள் தற்கொலைக்கு யார் தூண்டுதலும் காரணம் இல்லை. எங்கள் படத்தை யாருக்கும் கொடுக்க கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தனது திண்டிவனம் வீட்டு போன் நம்பர் மற்றும் திண்டிவனம் காவல் நிலைய எண்ணையும் எழுதி வைத்துள்ளார்.