மே.வங்க அரசுக்கு எதிராக மாவோயிஸ்டுகள் திடீர் புரட்சி - ரேஷன் கடைகள் சூறை!
கொல்கத்தா:
மேற்கு வங்க மாநிலத்தில் அரசுக்கு எதிராக மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் போர் அறைகூவல் விடுத்துள்ளனர். இதையடுத்து மாநிலத்தின் பல பகுதிகளிலும் ரேஷன் கடைகள் சூறையாடப்பட்டுள்ளன. இதனால் மேற்கு வங்க அரசு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
மாவோயிஸ்ட் அமைப்பின் இதழான கொரில்லா பார்டா என்ற இதழில், மேற்கு வங்க அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்துமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அதில், மாநிலம் முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களை அடித்து நொறுக்குங்கள், ஏழைகளுக்கு வழங்காமல் அரிசி உள்ளிட்டவை பதுக்கி வைக்கப்பட்டுள்ள ரேஷன் கடைகள், அரசு கிட்டங்கிகளைத் தாக்கி சேதப்படுத்துங்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து மாநிலத்தின் பல பகுதிகளிலும் ரேஷன் கடைகள், அரசு கிட்டங்கிகள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. அங்கு வைக்கப்பட்டிருந்த அரிசி மூடைகளை நக்சலைட்டுகளும், பொதுமக்களும், கிராம மக்களும் எடுத்துச் சென்று விட்டனர்.
கொரில்லா பார்டா இதழில், மித்னாபூர் மாவட்ட அரசு கிட்டங்கியில் மட்டும் 52 ஆயிரம் குவிண்டால் அரிசி இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இவற்றை பட்டினியால் வாடும் ஏழை மக்களுக்குக் கொடுக்காமல் அரசு அநீதி இழைத்து வருகிறது. ஏழை மக்களைப் பட்டினியில் வாட வைத்து வருகிறது.
இனிமேலும் யாரும் பிச்சை எடுக்க வேண்டும், அரிசி கொடுங்கள் என்று அரசிடம் கெஞ்ச வேண்டாம். உங்களுக்குத் தேவையானதை நீங்களே போய் எடுத்துக் கொள்ளுங்கள். இனியும் பட்டினிச் சாவுகள் தொடரக் கூடாது.
அரசு கிட்டங்கிகள் மக்களின் கிட்டங்கிகள். நமக்குத் தேவையான உணவை நாமே எடுத்துக் கொள்வோம். யாரிடமும் உதவி கேட்காதீர்கள் என்று அந்த அறைகூவலில் நக்சலைட்டுகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் திடீர் தாக்குதலால் மேற்கு வங்க அரசு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
மேற்கு வங்க மாநில கிராமங்கள் பலவற்றில், முறையாக ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதில்லை என்ற புகார் நீண்ட காலமாகவே உள்ளது. அரிசி, கோதுமை, சர்க்கரை ஆகியவை கடந்த சில மாதங்களாக முறையாக விநியோகிக்கப்படுவதில்லை. இதனால் மக்களும் கொந்தளித்துப் போயுள்ளனர்.
இந்தத் தாக்குதல் குறித்து மேற்கு வங்க மாநில உள்துறைச் செயலாளர் பிரசாத் ரஞ்சன் ராய் கூறுகையில், இது மேற்கு வங்க அரசுக்கு எதிரான சதித் திட்டம். குற்றவாளிகள் பலருக்கு இதில் தொடர்பு உள்ளதாக சந்தேகப்படுகிறோம் என்றார்.
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக டெல்லிக்கும், நாட்டின் பிற பகுதிகளுக்கும் அலைந்து திரிந்து அறிக்கை விடுவதும், பேட்டி கொடுப்பதும், ஆக்ரோஷமாக பேசித் திரிவதுமாக உள்ள கம்யூனிஸ்டுகள், அப்பாவி ஏழைகளின் வயிறுகள் குறித்தும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.