தொழிலதிபரின் மகன் கடத்தல்
சென்னை:
சென்னையில் வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்த தொழிலதிபரின் 14 வயது மகனைக் காணவில்லை. அவனை 2 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றுள்ளதாக போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது. போலீஸார் சிறுவனை மீட்க தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
சென்னை, தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் ஸ்டீபன் (38). இவர் மணலியில் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்கும் ஷோரூம் வைத்துள்ளார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவியும், காட்வின் சந்தோஷ் (14), ஜோசப் (11) என்ற இரு மகன்களும் இருக்கிறார்கள்.
நேற்று மாலை 6 மணிக்கு வீட்டுக்கு வெளியே இரு மகன்களும் அக்கம் பக்கத்தில் இருக்கும் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். பின்னர் இரவு அனைத்து சிறுவர்களும் வீடு திரும்பிவிட்டனர். ஆனால் ஸ்டீபனின் மகன் காட்வின் சந்தோஷ் வீடு திரும்பவில்லை.
மகன் வீடு திரும்பாதது கண்டு பதறிய தாய் தேன்மொழி, இளைய மகன் ஜோசப்பிடம் விசாரித்துள்ளார். அவன், நாங்கள் விளையாடும் போது அண்ணனை யாரோ இருவர் வந்து அழைத்து சென்றதாக கூறினான்.
பதறிப்போன தேன்மொழி பல இடங்களில் தேடிப் பார்த்து மகன் காணாததால், கணவருக்கு போன் செய்து கூறியுள்ளார். அவரும் நண்பர்கள் உதவியுடன் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சந்தோஷின் பள்ளி தோழர்கள் என அனைவரின் வீட்டிலும் தேடி காணாததால் பின்னர் ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து போலீஸார் நடவடிக்கையில் இறங்கினர். இந்த நிலையில், இன்று காலை ஸ்டீபனின் செல்போனுக்கு சந்தோஷ் பேசியுள்ளான். அப்போது, தன்னை சிலர் கடத்திச் சென்று சித்திரவதை செய்வதாக கூறியுள்ளான். ஆனால் சில நிமிடங்களில் போன் கட் ஆகி விட்டது.
இதைக் கேட்டு அதிர்ந்த ஸ்டீபன், போலீஸாரிடம் தகவலைத் தெரிவித்தார். இதையடுத்து எந்த போனிலிருந்து ஸ்டீபனை சந்தோஷ் தொடர்பு கொண்டான் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்டீபனுடன் ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாக யாரோ சிலர் சந்தோஷைக் கடத்தியிருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
சிறுவன் சந்தோஷை பத்திரமாக மீட்க போலீஸார் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர்.