கணவனை கொன்ற மனைவி கைது
நாகர்கோவில்:
திருவட்டார் அருகே குடிபோதையில் சித்ரவதை செய்ததால் ஆத்திரம் அடைந்த மனைவி நள்ளிரவில் கணவனை துடிதுடிக்க கட்டையால் அடித்துக் கொன்றார்.
திருவட்டாரை அடுத்த தச்சார் கோட்டுவிளையை சேர்ந்தவர் ஜோய். கூலித் தொழிலாளி. இவரது மனைவி மெட்டில்டா. இவர்களுக்கு பீவிஸ், சுதீப் ஆகிய 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
ஜோய் அடிக்கடி குடித்து விட்டு மெட்டில்டாவை அடித்து உதைத்து துன்புறுத்தி வந்தார். இதுகுறித்து பலமுறை மெட்டில்டா திருவட்டார் போலீசில் புகார் செய்தார். போலீசார் ஜோவை அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
ஆனால் தொடர்ந்து ஜோய் குடித்து விட்டு மனைவியை சித்ரவதை செய்து வந்துள்ளார். மனைவியுடன் தகராறு செய்து முடித்துவிட்டு ஜோய் வீட்டிற்கு வெளியே உள்ள ஓலை கொட்டகையில் படுத்து தூங்குவாராம்.
சம்பவத்தன்று போதையில் ஜோய் மெட்டில்டாவிடம் தகராறு செய்துள்ளார். ஆத்திரத்தில் மனைவியை அடித்து உதைத்துள்ளார். பின்னர் வழக்கம் போல் வீட்டில் வெளியில் போய் படுத்துள்ளார்.
கணவன் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்ததால் மனம் உடைந்த மெட்டில்டா வீட்டில் கிடந்த மரக்கட்டையை எடுத்துக் கொண்டு ஆவேசமாக வெளியே வநதுள்ளார். குடிபோதையில் உறங்கி கொண்டிருந்த கணவன் அருகில் சென்று அவரை கட்டையால் தலையில் தாக்கினார். இதில் மண்டை உடைந்து அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் ஜோய் பிணமானார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் திருவட்டார் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜோயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மெட்டில்டாவை போலீசார் கைது செய்தனர்.