திருத்தணி லாட்ஜில் இளைஞர் கொலை
திருத்தணி:
திருத்தணியில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்த வாலிபரை அவருடன் தங்கியிருந்தவர்களே கொலை செய்து விட்டுத் தப்பினர்.
திருத்தணி, சன்னதி தெருவில் வனிதா திருமண மாளிகை என்ற கல்யாண மண்டபம் உள்ளது. இங்கு ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதிகள் உள்ளன. இந்த விடுதிக்கு நேற்று மாலை 5 பேர் காரில் வந்தனர். தங்குவதற்கு அறை கேட்டுள்ளனர். தாங்கள் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருப்பதாகவும், இரவிலேயே காலி செய்து விடுவதாகவும் கூறியுள்ளனர்.
இதையடுத்து அவர்களுக்கு ரூம் கொடுக்கப்பட்டது. ஆனால் இரவாகியும் அவர்கள் யாரும் அறையைக் காலி செய்யவில்லை. மேலும் அறையிலிருந்தும் வரவில்லை. அறை உள்பக்கமாக பூட்டிக் கிடந்தது.
இதனால் லாட்ஜ் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த ஒரு வாலிபர் வாயில் துணி திணிக்கப்பட்டு, கை-கால்கள் கட்டப்பட்டு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
அவருடன் வந்த மற்ற 4 பேரையம் காணவில்லை. அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து அவர்கள் கொடுத்த சென்னை முகவரியில் விசாரணை நடத்த போலீஸார் சென்னை சென்றுள்ளனர்.
எதற்காக இந்தக் கொலை நடந்தது என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.