மாணவனின் கடத்தல் நாடகம்
சென்னை:
பரீட்சையில் தோல்வி அடைந்ததால் கடத்தல் நாடகம் ஆடிய 14 வயது மாணவனை நெல்லையில் அவனது உறவினர்கள் மீட்டனர்.
சென்னை, தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் ஸ்டீபன். இவரது மகன் காட்வின் சந்தோஷ் (14). வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சந்தோஷ் திடீரென்று காணாமல் போய்விட்டான். பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் சந்தோஷின் தந்தை ஸ்டீபன், தனது மகன் காணாதது குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
மேலும் தனது மகனை யாராவது கடத்தியிருக்கலாம் என்றும் தெரிவித்தார். இதனால் போலீசார் கடத்தப்பட்ட மாணவனை பிடிக்க தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.
இந்நிலையில் நேற்று ஸ்டீபனின் செல்போனில் பேசிய சந்தோஷ் தன்னை சிலர் கடத்தி வைத்திருப்பதாகவும், அடித்து சித்ரவதை செய்வதாகவும் சொல்லி போனை துண்டித்துவிட்டான்.
தனக்கு போன் வந்த தகவலை போலீசாரிடம் தெரிவித்தார் ஸ்டீபன். போலீசார் அந்த தொலைபேசி எண்ணை எடுத்து தீவிரமாக விசாரணை செய்து வந்தனர்.
அந்த எண்ணை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, திருநெல்வேலியில் உள்ள ஒரு மளிகைக் கடை என்றும், ஒரு சிறுவன் வந்து பேசி சென்றதாகவும் தெரிவித்தனர். அதற்கு போலீசார் அந்த சிறுவன் மீண்டும் பேச வந்தால் பிடித்து வைத்து தங்களுக்கு தகவல் கொடுக்குமாறு தெரிவித்தனர்.
அந்த சிறுவன் சந்தோஷ்தான் என்பதை உணற்ந்த ஸ்டீபன், நெல்லையில் உள்ள தனது உறவினர்களைத் தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்ட மளிகைக் கடைக்கு தனது மகன் போன் செய்ய வந்தால் பிடித்து வைத்து தனக்கு தகவல் தருமாறு கூறினார்.
அதன்படி நேற்று மாலை 6-30 மணிக்கு போன் செய்ய சந்தோஷ் வந்தபோது அவனை உறவினர்கள் பிடித்தனர். பின்னர் ஸ்டீபனுக்கு தகவல் கொடுத்தனர்.
தனது மகன் கிடைத்து விட்டதை போலீசாரிடம் ஸ்டீபன் தெரிவித்தார். பின்னர் போலீசார் அவனிடம், போன் மூலம் விசாரணை நடத்தினார்கள். அப்போது மாணவன் சந்தோஷ் கூறுகையில், காலாண்டு தேர்வில் நான் தோல்வி அடைந்து விட்டேன். அதனால் ஆசிரியர்கள், பெற்றோரை அழைத்து வருமாறு சொன்னார்கள்.
நான் பயந்து போய் நெல்லைக்கு வந்து, கடத்தப்பட்டதாக பொய் சொன்னேன் என்று கூறி அழுதுள்ளான்.
மாணவனை சென்னைக்கு அழைத்து வருமாறு ஸ்டீபனின் உறவினர்களுக்கு போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.