காங்-கம்யூ மோதலை தீர்த்து வைத்த கருணாநிதி
டெல்லி:
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் இடதுசாரிகளுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் ஏற்பட்ட மோதலைத் தீர்த்து வைத்ததில் முக்கிய பங்காற்றியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி.
என்டிடிவி தொலைக்காட்சியின் வாக் த டாக் நிகழ்ச்சியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் சேகர் குப்தாவுக்கு சிறப்புப் பேட்டியளித்தார் கருணாநிதி. அப்போது மகளும் எம்பியுமான கனிமொழியும் உடனிருந்தார்.
அப்போது கருணாநிதி கூறியதாவது
இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பிரச்சனையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடியை தொடர்ந்து இடதுசாரி கட்சித் தலைவர்களுடன் நான் பேசினேன்.
அவர்கள் இந்த விவகாரத்தில் பாரபட்சமின்றி சுமூக தீர்வு காண உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். தங்கள் கருத்தைத் தான் ஆதரிக்க வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் ஒரு போதும் வற்புறுத்தவில்லை.
நாட்டின் நலனுக்கு எது நல்லதோ அதையே செய்ய நானும் விரும்பினேன். இந்த பிரச்சனையை முன் வைத்து மத்திய ஆட்சி கவிழ்ந்துவிடக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். அதனால் இடதுசாரி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினேன். பிரகாஷ் காரத், பரதன் போன்ற தலைவர்கள் என்னை சென்னையில் சந்தித்துப் பேசினார்கள்.
மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவும் தொலைபேசியில் என்னுடன் விவாதித்தார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளும் இடதுசாரி கட்சிகளும் அடித்தட்டு மக்களின் நலனுக்காக உழைப்பவை. இதனால் இந்த அரசை காக்க வேண்டும் என்பதற்காக இரு தரப்பிலும் பேசி தீர்வு காணப்பட்டது.
ஆட்சி கவிழும் ஆபத்து என்ற சூழ்நிலையில் அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் நிதானமாக செயல்பட வேண்டும் என்பதே திமுகவின் கருத்து. இது குறித்து நான் சோனியா காந்திக்கும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் கடிதம் எழுதினேன். இடதுசாரிகளின் நிலையை விளக்கினேன்.
இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பை தெரிவிக்கும் முன்பே எங்களுக்கும் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக சில சந்தேகங்கள் இருக்கத்தான் செய்தன. ஒப்பந்தம் முக்கியம் அல்ல, அரசு முக்கியம். இடது சாரிகளுக்காக நாங்களும் போராடினோம்.
இந்த அரசை உருவாக்க எவ்வளவு சிக்கல்கள் வந்தன என்பதை நினைத்துப் பார்த்தால் இந்த அரசை காப்பாற்றுவது எளிமையானது தான் என்றார் கருணாநிதி.