சேதுவுக்காக மார்க்சிஸ்ட், இ.கம்யூ கூட்டு பிரசாரம்
சென்னை:
சேது சமுத்திரத் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், வேறு பல கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும், தமிழகம் முழுவதும் ஒரு வார காலத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து பிரசார இயக்கத்தை மேற்கொள்ளவுள்ளன.
மார்க்சிஸ்ட் செயலாளர் வரதராஜனும், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியனும் செய்தியாளர்களைக் கூட்டாக சந்தித்தனர். அப்போது இந்த அறிவிப்பை வெளியிட்டனர். அக்டோபர் 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை இந்த பிரசார இயக்கம் நடைபெறும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
வரதராஜன் கூறுகையில், மதவாத சக்திகள் சேது சமுத்திரத் திட்டத்தை தடுக்க முயலுகின்றன. இந்த சக்திகளை எதிர்க்க வேண்டும் என்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தெருமுனைக் கூட்டங்கள், உள்ளிட்ட பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் இந்த பிரசார இயக்கத்தின் மூலம் மேற்கொள்ளப்படும்.
தமிழகத்தில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைக்க புதிய வேலை வாய்ப்புகளை அரசுகள் உருவாக்க வேண்டும். புதிய துறைமுகங்களை உருவாக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் இந்த பிரசார இயக்கம் நடத்தப்படும்.
இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தைக் கைவிட வேண்டும். விலைவாசி உயர்வு சாதாரண மக்களை கடுமையாக பாதித்துள்ளது. எனவே விலைவாசியைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை மக்களுக்கு வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்க வேண்டும். சட்டவிரோதமாக மண் எடுப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் வரதராஜன்.
தா.பாண்டியன் பேசுகையில், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றத் தடையாக இருக்கும் சக்திகளை மக்கள் துரத்தியடிக்க வேண்டும். தோல்வி அடையச் செய்ய வேண்டும்.
இந்தத் திட்டத்திற்கு மாற்று தீர்வு காண்பதற்காக உச்சநீதிமன்றத்தில் 3 மாத கால அவகாசம் கேட்ட முடிவு தவறானது, இதை மத்திய அரசு தவிர்த்திருக்க வேண்டும்.
சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து நடத்தக் கோரி தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும்.
தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் தவறுகளைச் சுட்டிக் காட்டவும் இந்த பிரசார இயக்கத்தை நாங்கள் பயன்படுத்துகிறோம்.
திமுக அரசுக்கு நாங்கள் ஆதரவு தருகிறோம். ஆனால் அதற்காக, அந்த அரசு தவறு செய்யும்போது, ஜனநாயக நெறிமுறைகளுக்கு முரணாக நடந்து கொள்ளும்போது அதைத் தட்டிக் கேட்க தயங்க மாட்டோம் என்றார் தா.பாண்டியன்.