சாப்ட்வேர் என்ஜீனியரின் கின்னஸ் முயற்சி!
சென்னை:
சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியர் ஒருவர் வாயில் பிரஷ்ஷை வைத்து ஓவியம் தீட்டி கின்னஸ் சாதனை படைக்க தீர்மானித்துள்ளார்.
புதுச்சேரியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (26). இவர் சென்னையில் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். ஓவியத்தில் ஆர்வமுடைய இவர், பல்வேறு ஓவியங்களைத் தீட்டியுள்ளார்.
இந்த நிலையில் கின்னஸ் சாதனைக்காக அன்னை தெரசாவின் ஓவியத்தை, 600 சுதர அடியில், அக்ரிலிக் நிறங்களைப் பயன்படுத்தி வரையவுள்ளார். இதில் விசேஷம் என்னவென்றால் இந்த ஓவியத்தை வாயில் பிரஷ்ஷை வைத்துக் கொண்டு வரையவுள்ளார் ராஜேந்திரன். இது மட்டுமல்ல, எப்போதுமே வாயில் பிரஷ்ஷை வைத்துத்தான் ஓவியம் தீட்டுகிறாராம் ராஜேந்திரன்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கின்னஸ் சாதனைக்காக ஓவியம் வரைய திட்டமிட்டுள்ளேன். இதற்காக சென்னையில் உள்ள விஜிபி டிரேட் சென்டரில் 600 சதுர அடியில் ஓவியம் தீட்ட இருக்கின்றேன்.
அன்னை தெரசாவின் படத்தை வாயில் பிரஷ்ஷை வைத்து 11 நாட்கள் ஓவியமாக தீட்டப் போகிறேன். இந்த சாதனையை வரும் 19ம் தேதி தொடங்குகிறேன்.
நான் வரைந்துள்ள அனைத்து ஓவியங்களையும் மக்களின் பார்வைக்காக வைத்துள்ளேன். சமீபத்தில் நான் 70 சதுர அடியில் வரைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் படம் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது என்றார்.
ராஜேந்திரன் கடந்த 1999லிருந்து வாயில் பிரஷ்ஷை வைத்து ஓவியம் வரைய ஆரம்பித்தார். அவருடைய சாதனை ஓவியம் தீட்டும் நிகழ்ச்சியை மேற்பார்வையிடுவதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் வக்கீல், டாக்டர் மற்றும் கல்லூரி பேராசிரியர் ஆகியோர் இதில் இடம் பெறுகின்றனர்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இவ்வாறு வாய் மூலம் ஓவியம் வரைந்து பெரும் பணத்தைத் திரட்டி வழங்கியுள்ளார் ராஜேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.