ஐசிஐசிஐ வங்கியின் புதிய சேவை
சென்னை:
வங்கியில் பணம் செலுத்தவோ அல்லது எடுக்கவோ இனிமேல் வங்கிக்கு செல்லத் தேவையில்லாமல், வீட்டிலிருந்தபடியே வங்கிப் பரிவர்த்தனையை மேற்கொள்ளும் புதிய சேவையை ஐசிஐசிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய சேவை குறித்து ஐசிஐசிஐ வங்கி உயர் அதிகாரி மணீந்தர் ஜூனேஜா கூறியதாவது,
பணம் செலுத்துவது, பணத்தை பெற்றுக் கொள்வது, டிடி எடுப்பது, பே ஆர்டர் மற்றும் செக்குகளை தங்களுடைய கணக்கில் செலுத்துவது என்று எல்லா சேவைகளுக்கும் ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் இந்த திட்டம் மூலம் பயன் பெறலாம்.
இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியது டெலிபோன் அல்லது இன்டர்நெட் மூலமாக வங்கியை தொடர்பு கொண்டால் போதும். வங்கிக்கு வர வேண்டிய தேவையில்லை.
முதற்கட்டமாக 28 நகரங்களில் 294 கிளைகளில் இந்த சேவை அறிமுகம் செய்யப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு மிக மிக வசதியாக இருக்கும். அலைச்சல் மிச்சமாகும்.
இந்த திட்டம் மூலம் திருடர்களிடம் பணத்தை இழப்பது முற்றிலும் குறைந்து விடும்.
தற்போது இந்த சேவை குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் அறிமுகம் செய்யப்படுகிறது. சில மாதங்களில் நாடு முழுவதும் பரவலாக கிடைக்கும் என்று மணீந்தர் தெரிவித்தார்.