லாரி மோதி இருவர் பலி-குழந்தை படுகாயம்
ஆலங்குளம்:
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள முக்கூடல் அருகே இன்று காலை சைக்கிள் மீது மணல் லாரி மோதியதில் இருவர் உயிரிழந்தனர். குழந்தை படுகாயம் அடைந்தது.
முக்கூடல் அருகே உள்ள புதுப்பட்டி காலனி தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ். வாய் பேச முடியாதவர். மருதம்புத்தூரை சேர்ந்த வேலாயுதம் மகன் பண்டாரம். இவர்கள் இருவரது தோட்டமும் கண்டப்பட்டி என்ற இடத்தில் உள்ளது.
இன்று காலை தங்கராஜ் மற்றும் பண்டாரம் ஆகியோர் தங்களது தோட்டத்திற்கு சென்று வயலில் நாற்று நட்டு விட்டு தனித்தனியாக சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். பண்டாரம் தனது 3 வயது மகன் ஆறுமுகத்தை சைக்கிளில் பின்னால் வைத்து ஓட்டி வந்தார். அப்போது அந்த வழியாக வந்த மணல் லாரி இவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் உடல் நசுங்கிய தங்கராஜ், பண்டாரம் இருவரும் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தனர். படுகாயமடைந்த குழந்தை ஆறுமுகத்தை பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சம்பவம் நடந்தவுடன் லாரி டிரைவர் லாரியை அங்கிருந்து சற்று தொலைவில் நிறுத்தி விட்டு ஓடிவிட்டார்.
லாரியின் உரிமையாளர், டிரைவர் குறித்து முக்கூடல் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான தங்கராஜீக்கு ஆறுமுகவடிவு என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இதே போல் பண்டாரத்திற்கு அவ்வையார் என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர். இருவரது உடலையும் பார்த்து அவர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.